அறிமுக அரசியல்

ஆய்வாளர்களில் இருவகையினர் உள்ளனர். முதல் வகையினர் தாம் உண்மையென்று நம்புவதைக் கூறுவோர், தாம் கூறுவனவற்றை நம்புவோர். இரண்டாமவர் தாம் கூறுவது உண்மையல்ல என்று தெரிந்தும் துணிந்து பொய் கூறுபவர். இந்த இரண்டாம் வகையிலும் இரு வகையினர் உள்ளனர். முதல் வகையினர் தாங்கள் கூறும் பொய்யை எதிராளி எளிதில் பொய்யென்று இனம் காண முடியாமல் சொல்லும் திறனாளர்கள், இரண்டாம் வகையினர் பொருந்தப் பொய் கூறக் கூடத் திறனற்றவர்கள். இரண்டாம் வகையில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் சு.கி.செயகரன்.

பொய் பேசுகிறார் என்றதும் அவர் புவி இயங்கியலில் பட்டம் பெற்றதைப் பற்றியோ உயர்ந்த பல பதவிகளில் இருந்ததைப் பற்றியோ பொய் கூறுகிறார் என்று நாம் கூறவில்லை. இன்று நிலவும் கல்வி அமைப்பில் மண்டையில் எந்தச் செய்தியையும் பதிக்காமல் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மட்டத்தில் கூட முதல் மதிப்பெண் பெற்று விட முடியும் என்பது பலரும் உணர்ந்த உண்மை.[1] அது போல் துறை அறிவு இருந்து அதை வெளிக்காட்டுவோரை விட அதை வெளிக்காட்டாதவர்களுக்கு உயர்பதவி வாய்ப்புகள் மிகுதி, துறை அறிவு அறவே இல்லாதவர்களுக்கு அதைவிட மிகுதி என்பது பிழைக்கத் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்; தெரியாதவர்களில் சிலருக்கும் தெரியும்.

நாம் இங்கு பொய் என்று குறிப்பிடுவது அவரது படிப்பு அல்லது பதவியைப் பற்றி அல்ல. அவர் குறிப்பிடும் “வரலாற்று”ச் செய்தியைப் பற்றி. “குமரிக் கண்டம்” என்ற பெயர் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லையே என்பதைத் தன் முதன்மையான கேள்விகளுள் ஒன்றாக வைத்துக் கொண்டுள்ள திரு.சு.கி.செயகரன், “தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ‘குமரி எனும் நிலநீட்சி’, "இலக்கியக் குறிப்புகள் காட்டும் ‘குமரி எனும் நில நீட்சி’ (பக்.18), "சங்கப் புலவர்கள் குறிப்பிடும் ‘குமரி எனும் நிலநீட்சி’" (பக்.19) என்ற சொற்றொடர்களில் வரும் “குமரி எனும் நிலநீட்சி” என்ற தொடர் சங்க அல்லது பிற தமிழ் இலக்கியங்களில் எங்கு வருகிறது என்று கூறுவாரா? இல்லாத செய்திகளை அல்லது புலனங்களை இருப்பவை போன்று மீண்டும் மீண்டும் கூறப்படும் பொய்களால் உண்மை என்று நிறுவும் கோயபல்சு பாணி எப்போதும் பயனளிப்பதில்லை. சங்க இலக்கியம் எதிலும் முழுகிய நிலப்பரப்பைக் குமரி என்ற பெயரில் எங்குமே குறிப்பிடவில்லை என்பது தான் உண்மை. “குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்ற சங்கப் பாடல் வரியில் வரும் அயிரை எனும் நன்னீர் மீன் பற்றிய குறிப்பு ஒன்றே குமரியம் பெருந்துறை என்பது குமரி எனும் ஆற்றின் துறை என்பதற்கான மறைமுகச் சான்றாக உள்ளது.[2]

சங்க இலக்கியத்தில் முழுகிய நிலப்பரப்பு பற்றிய சமற்கிருத நூல்களில் உள்ள அளவுக்குக் குறிப்புகள் இல்லாமல் போனதற்கும் ஓர் அரசியல் பின்னணி உண்டு. குமரிக் கண்டப் பகுதிகள் பல்வேறு காலகட்டங்களில் முழுகிய நிகழ்முறையில் இறுதியாக வெளியேறியவர்கள் தமிழகத்தினுள் நுழைந்தனர். மக்கள் எளிதில் புக முடியாத அடர்காடாக இருந்ததனால் இரும்புக் கோடரி கண்டு பிடித்த பின் தான் இது இயல்வதாயிற்று. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இரும்புக் கோடரியின் கையாளல் ஒரே நேரத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் கூற முடியாது. அதன் பரவல் வெவ்வேறு நிலப்பரப்பில் வெவ்வேறு காலகட்டங்களில் இடம் பெற்றிருக்கலாம். உலகில் மிகப்பெரும் பண்டை நாகரிகங்களெல்லாம் நீண்டபெரும் ஆறுகள் பாலையில் ஓடி மருதத்தினுள் (டெல்டா) நுழையும் இடை நிலத்தில் மென்காடுகள் தொடங்கும் இடங்களில்தான் தோன்றியுள்ளன. குமரிக் கண்டத்தின் நாக நாட்டிலிருந்து கடற்கோளுக்குத் தப்பி கட்சு வளைகுடாவில் அவந்தி நாட்டில் கரையேறிய மக்கள் (மணிமேகலை, பழம் பிறப்புணர்ந்த காதை பார்க்க) சிந்தாற்றின் மணல்வெளிகள் வழியாக முதலில் வடமேற்கு நோக்கியே சென்றனர். பின்னர் கங்கைச் சமவெளிக் காடுகளை அழித்துக் கொண்டேதான் கிழக்கு நோக்கிப் பரவினர். அதுபோல் தமிழகத்திலும் தெற்கில் கரையேறி வடமேற்கு நோக்கிக் காடுகளை அழித்துப் பரவினர் என்பதற்குக் கேரளத்தைத் தன் கைக்கோடரியைக் கடலில் வீசிப் பரசுராமன் உருவாக்கினான் என்ற தொன்மக் கதையால் புரிந்து கொள்ளலாம். பரசுராமன் என்பவன் அரசர்களுக்கு எதிரான பூசாரியரின் போராட்டத்தில் பூசாரியரின் இறுதி வெற்றியைச் சுட்டும் ஒரு மனிதனின் தொன்மப் படிமம். ஒருவேளை அது பின்னர் ஒரு தலைமைப் பீடப் பெயராகவும் மாறி இருந்திருக்கலாம். அவனது படைக்கலமாக மழுவெனும் கோடரி கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடாகக் காடுகளை அழித்துக் கொண்டு சேரமரபினர் அங்கு ஆட்சியமைத்ததன் பார்ப்பனப் பதிவாக இதைக் கொள்ள வேண்டும். பாண்டியர் தமிழ் அரசர்களில் முதலில் தோன்றியவர்களாகக் கருதப்படும் சூழலில் சேர சோழ பாண்டியர் என்ற வரிசை மரபு அவர்களில் இன்றைய தமிழகத்துக்கு சேரர்கள் முதலில் வந்ததன் காரணமாக இருக்கலாம்.

இடப்பெயர்கள் வரலாற்றுவரைவின் ஒரு கருப்பொருள் என்பது “கற்றுத்துறைபோய புவியியங்கியல் வல்லுநருக்குத் தெரிந்திருக்கும். திருநெல்வேலி நகருக்குள் ஓடும் தாமிரபரணிக்குப் பல பெயர்கள் இருப்பதுவும் அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். பண்டை உலகக் கடலோடிகள் குறிப்பிட்டுள்ளவாறு குமரிமாக்கடலுக்கு தெற்கில் மகரக் போட்டுப் பகுதியில் இருந்த தாமிரபரணி என்ற நிலப்பரப்பின் பெயருடன் இந்தோனேசியக் கடற்பகுதியில் உள்ள போர்னியா, புரூனெய் என்ற பெயர்களுக்கு இணையாக பொருனை என்ற பெயரும் இதற்குண்டு. இந்தப் பெயர் குமரிமாவட்டத்திலுள்ள ஓர் ஆற்றுக்கும் உரியது. வேறெங்காவது உள்ளதா என்று ஆய்வதும் நன்று. இதற்குச் சோழனாறு என்ற ஒரு பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் புகழ் பெற்ற ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். சோழன் இப்பகுதியில் ஆண்டதற்கு சோழ மரபின் தோற்றக் குறியாகிய கதிரவனின் பெயரில் அமைந்த ஆதித்தநல்லூர் அசைக்க முடியாத சான்றாகும். பின்னர் சேரர்களையும் சோழர்களையும் தொலைவிடங்களுக்குத் தூரத்திவிட்டுப் பாண்டியன் வந்து சேர்ந்தான்.

“மலிதிலிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணங்கிய வாடாச்சீர்த் தென்னவன்”
(முல்லைக்கலி 104: 1-4)

என்னும் வரிகள் குறிப்பது இந்த நிகழ்வாகலாம். கலித்தொகை கூறும் இச்செய்திக்கு புவியின் மேற்பரப்பிலுள்ள புவியியற் பெயர்கள் சான்று கூறுகின்றன.

இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்துக்குள் வரும்போது அவர்களைவிட வளர்ச்சி குன்றியவர்களாயிருந்த பறையர், பாணர், துடியர், கடம்பர் என்ற நான்கு குடியினர் இங்கு வாழ்ந்தனர். அவர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஒருவேளை ஐரோப்பியக் காடையர் செய்தது போல் அவர்களைக் கொன்று குவித்து விட்டுக் கூட நம் சேர, சோழ, பாண்டியர் இங்கு காலூன்றியிருக்கலாம். இன்று ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் பழங்குடியினர் வந்தேறி ஐரோப்பியர்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதைப் போல் இந்தப் பறையரும் துடியரும் பாணரும் கடம்பரும் தூக்கியிருந்த ஒரு சூழலில் தாங்கள் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க குமரிக் கண்டம் பற்றிய செய்திகளை, பாண்டியர் குலமுதல்வி குமரி என்ற பெண்ணே என்ற உண்மையைச் சங்கத் தொகுப்பினுள் மறைத்துள்ளனர். அவர்களின் முயற்சிகளையும் மீறி உள்ளே புகுந்து விட்ட குறிப்புகள் தாம் குமரியம் பெருந்துறையும் மாங்குடிக் கிழாரின் பாடலும். ஆனால் வரலாற்றை மறைக்க விரும்பாத சிலர் அல்லது தெற்கின் அளவுக்கு மூலக்குடிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ளாத வட இந்தியாவில் குடியேறிய குமரிக் கண்ட மக்கள் தொன்மங்களாகவும் மறைகளாகவும் குமரிக் கண்டச் செய்திகளைப் பதிந்து வைத்துள்ளனர். இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக இந்தச் செய்திகளைப் பதிவதற்கென்றே வேத மொழியையும் சமற்கிருதத்தையும் கூட மக்கள் மொழிகளிலிருந்து வேறுபட்டதாக வடிவமைத்திருக்கலாம். அம்மொழியையும் படிக்க அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் முயன்ற போது அம்மொழியாக்கங்களைப் படிப்போருக்கும் கேட்போருக்கும் தண்டனை என்ற கருத்து உருவாகியிருக்கலாம்.

இன்று பறையர்கள் பெருமளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். மிகுந்த சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாக. பாணர்கள் ஆங்காங்கே சிலர் உள்ளனர். பிற சாதிகளில் இணைந்தும் உள்ளனர். துடியர் எனும் உடுக்கடிப்போர் கோடாங்கி என்ற பெயரில் வாழ்கின்றனர் என்று தெரிகிறது. கடம்பர் சேர அரசர்களால் துரத்தப்பட்டு இன்று கோவாவில் வாழ்கின்றனர். இந்த வரலாற்று அரசியலின் பின்னணியில் தான் நாகரிகத்தின் முன்னோடிகளான இந்தியர்களிடையில் முறையான வரலாற்று வரைவுகள் இல்லாமல் போயிருக்க வேண்டும்.

“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி” என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு நம் “படிப்பாளிகள்” மிகவும் தான் நஃகல் அடிக்கிறார்கள். கல் தோன்றி அதிலிருந்து மண் தோன்றியது என்ற அடிப்படை உண்மையைக் கூறும் புவியியங்கியலை ஐரோப்பியர்களுக்குத் தொடங்கி வைத்தவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காட்லாந்தில் வாழ்ந்த மருத்துவராக இருந்து ஓய்வு பெற்று பண்ணையாளராக மாறிய அட்டன் என்பவர்.[3] அதிலிருந்து வளர்ந்த புவியியங்கியல் இன்னும் மழலை கூடப் பேசப் பயிலாத குதலை நிலையில் தான் உள்ளது. கல்தோன்றி அதிலிருந்து மண் தோன்றும் என்பது மட்டுமல்ல, ஊத மறை கூறவது போல உலகம் ஆண்டவன் படைத்தது போல் மாறாமல் இருப்பதல்ல, கடலின் இடைவிடா இயக்கத்தால் தோன்றல், நிலைத்தல், அழிதல் என்ற முந்நிலையையும் எய்துவதாகும் என்பதனையும் நம் முன்னோர் பதிந்து வைத்துள்ளனர்.

“முந்நீர்-கடல்; ஆகுபெயர், ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவை என்பார்க்கு அற்றன்று ஆற்றுநீர் மேனீராகலானும் இவ்விரண்டுமில்வழி ஊற்றுநீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்".

இது சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, உள்வரி வாழ்த்தில் “முந்நீரினுள் புக்கு....” எனத் தொடங்கும் மூன்றாம் செய்யுளில் வரும் முந்நீர் என்ற சொல்லுக்கு அடியார்க்குநல்லாரின் விளக்கத்தைப் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் சிலப்பதிகாரம் உரையில் தந்துள்ளது (சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1999 பக். 396, 409).

கடல் நிலமாக மாறும், நிலம் கடலாக மாறும் என்ற புவியியங்கியல் உண்மையையும் அட்டனுக்குப் பின் தான் ஐரோப்பிய அறிவியல் அறிந்து கொண்டது.

புவியியங்கியலில் மட்டுமல்ல, அனைத்து அறிவுத்துறைகளிலும் ஐரோப்பிய அறிவியல் குதலைப் பருவத்திலேயே உள்ளது. ஆனால் நம் மூதாதையினர் அனைத்துத் துறைகளிலும் இவர்களைத் தாண்டிச் சென்றுள்ளனர் என்பதற்கு நம் பதிவுகளில் வலுவான தடயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை இனங்காண ஐரேப்பியர் வளர்த்தெடுத்துள்ள அறிவியல்களின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது என்பது இன்று நாமுள்ள இரங்கத்தக்க நிலை. ஆனால் நம் முந்தையோரின் எய்தல்கள் நம் உயிரணுக்களில் பதிந்துள்ளன. வல்லரசியப் பொருளியலுக்கும் சிந்தனைகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் “படிப்பாளிகள்” வைக்கும் தடைகளையும் நகையாடல்களையும் ஊக்குவிப்பாகக் கொண்டு ஐரோப்பியரை அறிவியலில் தாண்டிச் செல்வோம். கல் தோன்றி அதிலிருந்து மண் தோன்றுவதைக் கண்டவன் தமிழன் என்பதை நெஞ்சை நிமிர்த்துச் சொல்வோம். இந்த அறிமுக அரசியலிலிருந்து, ஆதிமனிதர் தோன்றியது 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் என்ற சு.கி.செயகரனின் வேடிக்கையான கூற்றையும் ஆய்வோம்.


அடிக்குறிப்பு:

[1]கடம் அடித்தல் அல்லது உருப்போடுதல் எனப்படும் பாராமல் படித்தல் மூலம் நினைவை நிறைத்து தேர்வின் போது அதைக்கக்கி வைக்கும் நடைமுறையைக் கல்வித்துறையிலுள்ளோர் “பிட்டுத்தள்ளுதல்” என்பர். குழாய்ப் பிட்டு அவிக்கும் நடைமுறையில் பிட்டுமாவையும் தேங்காய்த்துருவலையும் மாற்றி மாற்றிக் குழாய்க்குள் நிறைத்து வெந்ததும் ஒரு கோலால் வெளியே தள்ளுவதை இந்தச் சொல் குறிக்கும். முன்பு மூங்கில் குழாய் பயன்பட்ட பொது அதில் கொஞ்சம் மாவு ஒட்டிக் கொண்டிருக்கும். இப்போது கறையேறா உருக்கு (Stainless steel) வந்த பிறகு கொஞ்சங்கூட ஒட்டுவதில்லை. முன்பு ஒராண்டு இரண்டாண்டு, மூன்றாண்டுப் பாடங்களை நினைவு வைத்து ஒரே தேர்வில் எழுதிய காலத்தில் படித்தவர்களுக்கு அவர்கள் விரும்பாவிடினும் சில செய்திகள் நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கும். இப்போது பருவமுறைத் தேர்வு முடிந்ததும் படித்த நூலையும் நினைவிலிருக்கும் செய்திகளையும் ஒருப்போல் தூக்கியெறிந்து விடும் நிலையில் எதுவும் நினைவில் ஒட்டுவதில்லை. புறநிலைக் கேள்விகள் (Objective type questions) எனப்படுபவற்றில் சில உத்திகளைக் கடைப்பிடித்தால் எதையும் படிக்காமலே நல்ல மதிப்பெண் பெற்றுவிட முடியும். திரு.செயகரனின் பிறந்த ஆண்டை வைத்துப் பார்க்கும் போது அவர் படித்த காலத்தில் இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இது போன்ற குறுக்குவழிகளைத் தடுப்பதற்காக, தவறான விடைகளுக்கு மதிப்பெண்களைக் கழிக்கும் நடைமுறை அப்போது இல்லை. படிக்காமல் முதலிடம் பெறுவது பற்றி மார்க்கு டுவெயின் எழுதிய புதினத்தின் கதைத் தலைவனாக சிறுவன் பலப்பக் குச்சிகளை வைத்து அட்டைகளை வாங்கி பரிசு பெறும், நிகழ்ச்சியைப் படித்துப் புரிந்து கொள்க.

[2]இந்தச் செய்தியை எமக்குச் சுட்டிக்காட்டியவர் பேரா. க.ப.அறவாணன் ஆவார். சென்னையில் நடைபெற்ற குமரிக்கண்டக் கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது "கழக இலக்கியத்தில்எங்கும் முழுகிய நிலப்பரப்புக்குக் குமரி என்ற பெயர்க்குறிப்பு ஏதுமில்லை என்று நான் குறிப்பிட்ட போது அவர் இடைமறித்து இதைக் கூறினார்.

[3]The Crust of the Earth, Ed. Samual Rappert and Helen Wright, A Signet Scientific Library Book. Pub. The New American Library, 1962 Art. “Geology, the Easy Science” by W.O. Hotchkiss P.16.

2 மறுமொழிகள்:

said...

ஐயா நலமா?

'கல்தோன்றி மண்தோன்றா' என்கிற வரிகளில் நாம் இதுக்கெல்லாம் முன்தோன்றினோம் எனும்போது இறங்கு வரிசையில்தானே சொல்லவேண்டும். 'உங்க அப்பனுக்கும் தாத்தனுக்கும் முந்திய ஆளு' எனச் சொல்வதுதான் சரியாகும் இல்லையா?

'உங்க தாத்தனுக்கும் அப்பனுக்கும் முந்திய ஆளு' எனச் சொல்வது சரியானதொரு வரிசையாக இல்லையே?

அப்படிச் சொல்கையில் மண்ணுக்கும் ஏன் கல்லுக்கும் முன்பே தோன்றியவர்கள் நாம் என்பதுவே சரியாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்.

கவித்துவ வெளிப்பாடுகளில் அறிவியல் பொதிந்துள்ளதா அல்லது அது அலங்கார வெளிப்பாடுதானா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது. கல்லிலிருந்து மண் தோன்றியது என்பதை உணர்ந்து கவிதையில் வடித்தவரின் பிற பாடல்களில் அத்தகைய அறிவியல் வெளிப்பாடுகள் உள்ளனவா?

said...

நானும் குமரிகண்டத்தை சார்ந்தவன்...

நான் படித்த சில வற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

http://thonmai.blogspot.com/2007/12/blog-post.html


http://www.geotamil.com/pathivukal/mayilangkuudal_p_nadarasan_on_tamilinthonmai.htm

http://thirutamil.blogspot.com/2009/11/2012-1.html