மனம்திறந்து....... 3

இன்று வல்லரசுகளுக்கு இங்கிருந்து கிடைக்கத்தக்க புலனங்கள் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் “தொண்டு” நிறுவனங்களின் “திட்டங்களுக்கு” பணம் பெறுவதற்காக வழங்கும் தரவுகள் மூலமாகவும் பெரும்பாலும் கிடைத்துவிட்டன. இனி பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொள்ளுங்கள்; ஆசியரியர்களை ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்திக் கொண்டால் போதும்; இளைஞர்களே வாருங்கள்! நுண்ணுயிரியல் படியுங்கள்! கணிணியில் புதிய புதிய மென்பொருட்களை வடித்துத் தாருங்கள்! அவற்றைக் கொண்டு உங்கள் மூத்த குடிமக்கள் திரட்டித் தந்த புலனங்களை வகைப்படுத்திக் கொடுங்கள்! உங்கள் நாட்டில் நீங்கள் தாம் உயர் வருமானம் உடையவராயிருப்பீர்கள்! எங்கள் நாட்டுக்கு வாருங்கள்! திறந்த கழிப்பிடமாக உள்ள உங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! உங்கள் நாட்டில் வேளாண்மை வேண்டாம்! தரிசாகட்டும் நிலங்கள்! அதில் மாடுகள் வளரட்டும்! அவற்றின் இறைச்சி எங்களுக்கு வேண்டும்! நீங்கள் இறைச்சியை உண்ணாதீர்கள்! குருதிக் கொதிப்பு வந்துவிடும்! இயற்கை உணவை உண்ணுங்கள்! இறைச்சி இயற்கை உணவில்லையா என்று முட்டாள்கள் போல் எங்களைக் கேட்காதீர்கள்! எங்கள் நாட்டில் தான் இறைச்சி இயற்கை உணவு! எங்கள் புல்வெளிகளை விளைநிலங்களாக மாற்றிவிட்டோம். அங்கிருந்து உங்களுக்கு “இயற்கை உணவு” வழங்குவோம். நாங்கள் மானியம் கொடுத்து பால்பொடியை மலிவாக உங்களுக்கு ஏற்றுமதி செய்வோம். அதிலிருந்து ஆரோக்கியா, கோமாதா, தமிழ் என்று பல பெயர்களில் “பாலை” வாங்கி உண்ணுங்கள்! உங்களுக்குப் பால்மாடு வேண்டாம். நாங்கள் பாலுக்கு, வேளாண்மைக்கு மானியம் வழங்குவதை எதிர்த்து உங்கள் தலைவர்கள் உலக அரங்குகளில் முழங்குவதை நம்ப வேண்டாம்! எங்கள் சொல்படி அவர்கள் ஆடும் நாடகம் அது. உங்கள் நாட்டில் ஏராளமாகப் பணம் உள்ளதென்று கூறுகிறீர்களா? அதனால் எதுவும் உங்கள் நாட்டுக்குப் பயனில்லை. உங்கள் பண அமைச்சர் சிதம்பரமும் தலைமை அமைச்சர் மன்மோகனும் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் எங்கள் ஆட்கள்!; எங்களிடம் நீண்ட நாள் பயிற்சி பெற்றவர்கள். வருமானவரி வேட்டை நாய்களை வைத்துக் கடித்துக் குதறிவிட மாட்டார்களா? அப்படியே அவர்கள் விட்டாலும் எமது பொதுமைக் கட்சித் தோழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? கிழிகிழி என்று கிழித்து விடமாட்டார்களா? உங்கள் மக்களிலிருந்து தலைவர்கள் உருவாகி எதிர்க்கமாட்டார்களா என்றா கேட்கிறீர்கள்? உங்களின் இன்றைய தலைவர்களையும் அவர்கள் அடைக்கலம் புகுந்துள்ள திரை நடிகர்களையும் மீறி நீங்கள் மாற்றுத் தலைமையைத் தேர்ந்தெடுக்க நெடுங்காலம் ஆகுமய்யா! அதற்குள் இந்த முகம்மதியர்கள் முந்திக் கொள்ளக்கூடும். எவர் முந்தினாலும் எங்களுக்கு ஒரே வழி, இந்த உலகத்தை அணுகுண்டால் அழித்து விட்டு மனிதர் வாழத்தக்க இன்னொரு கோளுக்கு ஓடிவிடுவதுதான். அதற்காகத் தான் நாங்கள் பெரிய பெரிய விண்வெளித் திட்டங்கள் போடுகிறோம். அதற்கு உம் போன்ற இளைஞர்கள் தேவை! விரைந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். இது இயலுமா என்று கேட்கிறீர்களா? வேறு உலகங்களிலிருந்து இங்கு மனிதர்கள் வந்துள்ளனர் என்று எரிக்வான் டெனிக்கான் எழுதியுள்ளவற்றைப் படித்ததில்லையா? அவர்கள் வேற்றுக்கோள் மனிதர்கள் இல்லை; குமரிக்கண்ட மக்கள் என்கிறார்களா? அதெல்லாம் பிதற்றல், புலவர்களின் கற்பனை. அதை நம்பாதீர்கள்! எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்! உங்கள் பெற்றோரையும் தேவையானால் அழைத்துக் கொள்ளுங்கள்! எங்கள் நாட்டிலுள்ள அதிகார வகுப்பு எங்கள் நாட்டில் பணியற்றிய உம் நாட்டுப் பொறியாளர்களைக் கையில் விலங்கு பூட்டித் தெருத் தெருவாக இழுத்துச் சென்றதைக் கேட்கிறீர்களா? அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்! பெரிய வினைகளில் சிறுசிறு தவறுகள் நடக்கத்தான் செய்யும், ஈராக்கில் எங்கள் படைவீரர்கள் நடந்து கொண்டதைப்போல, உங்கள் தமிழ்நாட்டில் “மூத்தோர் அறவோர் பசு பத்தினி பெண்டிர்” என்றெல்லாம் போரில் விலக்கு அளித்துவிட்டுப் பெண்கள் தலையை மழித்து மயிரைக் கயிறாக்கி அவர்களை கொண்டே தேர் இழுக்க வில்லையா உங்கள் மன்னர்கள்?

அமெரிக்காவின் வரலாறு இழிவானது. அரேபியர்களின் கடல் வாணிகப் போட்டியையும் துருக்கியிலிருந்த தடையையும் எதிர்கொள்ள மாட்டாமல், அவர்களைத் தவிர்ப்பதற்காகவே உலகம் உருண்டையானது என்று அப்போது தான் கண்டுபிடித்துச் சொன்ன கோப்பர்நிக்கசின் கூற்றை நம்பி கிழக்கே பொன்னும் பொருளுமாகக் கொட்டிக்கிடக்கும் இந்தியாவைத் தேடி மேற்கே புறப்பட்டவர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்தது அமெரிக்கக் கண்டம். புதிய உலகம் என்று அவர்கள் அதற்குப் பெயரிட்டாலும் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் நிறைந்து நாகரிக முதிர்ச்சியும் பெற்றிருந்த கண்டம் அது. குமரிக் கண்டத்தின் அழிவால் வெளி உலகத்தொடர்பு குன்றி வளர்ச்சி தேங்கி நின்ற அவர்களை ஐரோப்பியக் காடையர் ஏசுநாதரின் பெயரைச் சொல்லி கூட்டங்கூட்டமாகக் கொன்று அழித்தனர். அந்த மக்களின் வாழிடங்களிலிருந்து பொன்னையும் பொருளையும் கப்பல் கப்பலாக அள்ளிச் சென்றனர் அமெரிக்காவைக் கண்டறிந்த (சு)பானியர். அதனை அறிந்த இங்கிலாந்தின் அரசியான முதல் எலிசபத்தின் படைத்தலைவர்கள் எனப்படும் கடற்கொள்ளையர்கள் பானியக் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். பின்னர் பிரஞ்சியரும் அதில் கலந்து கொண்டனர். இவ்விரு கும்பலும் அங்கு சென்று தங்கள் கொலை வெறியை காட்டத் தவறவில்லை.

ஏற்றுமதிக்குத் தேவைப்பட்ட கம்பிளிக்காக குத்தகை உழவர்களை நிலங்களிலிருந்து விரட்டிவிட்டு வேலியிட்டு கம்பிளி ஆடுகளை வளர்க்கத் தொடங்கியதால் ஏற்பட்ட உணவுப்பொருள் பற்றாக்குறையை நிரப்ப அமெரிக்காவில் கோதுமை விளைப்பதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து மந்தை மந்தையாகக் கறுப்பின மக்களைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஓட்டிச் சென்றனர் ஐரோப்பிய “நாகரிக மக்கள்”. கி.மு.16ஆம் நூற்றாண்டுவாக்கில் இதே பானியரைப் பிடித்துச் சென்று பினீசியர்கள் அடிமைகளாக விற்றதாக கிரேக்க வரலாற்றாசிரியர் ஏராடோட்டசு பதிந்து வைத்துள்ளார். கறுப்பின மக்களோடு இங்கிலாந்தில் கொலை, களவு, காமம், ஏமாற்று, பரத்தைமை போன்ற குற்றங்களுக்காகச் சிறைப்பட்டவர்களை விடுவித்து அரசே அமெரிக்காவுக்கு விடுத்து வைத்தது. இவ்வாறு குற்றச் செயல்களுக்காகவே பிறந்த பிறவிகளின் பிறங்கடைகளே அமெரிக்கர்கள். தங்கள் வரலாற்று இழிவுகளை உலகின், குறிப்பாக, வரலாற்றில் தேங்கி நின்று ஐரோப்பியரின் சீண்டலால் விழிப்பெய்தி எதிர்த்துக் கேள்வி எழுப்பத் துணிந்து நிற்கும் ஏழைநாட்டு மக்களின் கண்களிலிருந்து மறைக்கவும் அம்மக்களின் உண்மையான வரலாற்றுப் பெருமை அம்மக்களுக்குத் தெரிந்து அவர்கள் வீறுகொண்டு விரைந்து எழுந்து தம் மீது அமெரிக்கா செலுத்தும் மேலாளுமையிலிருந்து விடுபடும் போராட்டம் வீறு பெறாமல் தடுக்கவும் தோதான வரலாற்றுவரைவு நெறிமுறைகளை வகுத்துத் தம் விருப்பத்துக்கிசைய வரலாறு எழுதும் அறிவுச்”சிவி”களைத் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இவ்வாறு இந்திய அரசு தேர்ந்தெடுக்கும் “அறிஞர்களும்” அமெரிக்கா தேடி எடுக்கும் “ஆய்வாளர்களும்” ஒரே கண்ணோட்டம் கொண்டவர்களாக அமைந்துள்ளனர்.

வரலாறு, இலக்கியம், பண்பாடு என்ற துறைகளிலிருந்து வேறான துறைகளைச் சேர்ந்தோரையும் இந்த “வரலாற்றுவரைவு”ப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற வல்லரசிய நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பை காலச்சுவடு இதழும் காலச்சுவடு பதிப்பகமும் தலைமேல் கொண்டுள்ளன. அதன் வெளிப்பாடாகச் சில ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு இதழில் “குமரிக் கண்டக் குழப்பம்” என்ற தலைப்பில் சு.கி. செயகரன் என்ற “மாபெரும்” புவியியங்கியல் வல்லுநர்” ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு எதிர்வினையாற்றி உலகம் முழுவதிலுமிருந்து வந்த மடல்களில் ஒன்றைக் கூட அந்த இதழ் வெளியிடவில்லை. (பிப்.2006 இதழில் பெயருக்கு ஒரு மடலை வெளியிட்டுக் காலங்கடந்து கடனைக் கழித்துள்ளது). அது மட்டுமல்ல. அந்தக் கட்டுரையில் சொன்ன கருத்துகளை விரித்து குமரி நிலநீட்சி என்ற நூலைக் காலச்சுவடு பதிப்பகம் அதே ஆசிரியரைக் கொண்டு எழுதி வெளியிட்டுள்ளது.
சு.கி.செயகரன் உலகளவில் புகழ்பெற்ற புவியியங்கியல் வல்லுநர் என்றும் உலகளவில் அவர் பன்னாட்டு நிறுவனங்களில் புரிந்த பணிகள் பற்றியும் நூலில் செய்திகள் உள்ளன. ஆனால் நூலில் ஒன்றுக்கு ஒன்றாக ஒன்றுக்குள் ஒன்றாகக் கிடக்கின்ற எண்ணற்ற முரண்பாடுகள் அவர் இந்நூலை எழுதும் போது தன்னினைவோடுதான் இருந்தாரா என்ற ஐயத்தைத் தருகின்றன. புவியியங்கியலை கல்லூரிக்கு வெளியே கற்ற எனக்கே தவறென்று தெளிவாகத் தெரியும் அவரது கூற்றுகளைப் படிக்கும் போது இவர் போன்ற “வல்லுநர்”களைக் கொண்டு இயங்கும் உலகளாவிய நிறுவனங்களின் தரம் பற்றியும் நமக்கு ஐயங்கள் எழுகின்றன. அதேநேரம் இந்நூலைப் படித்துவிட்டு ஆகா ஓகோ என்று பாராட்டும் நம் அறிவு”சீவி”களின் மழுமண்டைத் தனத்தைப் பார்த்து நான் மலைத்து நிற்கிறேன்.

குமரிக்கண்டம் பற்றிய அனைத்தும் தழுவிய ஒரு பெருநூல் எழுத வேண்டும், அதற்கான கருப்பொருட்களைத் தேட வேண்டும், அப்போது இந்நூலில் எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கும் விடைகாண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலைப் படிப்பதையே தள்ளிப்போட்டு வந்தேன். ஆனால் ஒரு சூழலில் இந்நூலைப் படிக்க வேண்டி வந்தது. படித்த பின் தான் தெரிந்தது, நூலினுள் ஆசிரியர் தந்துள்ள செய்திகளே குமரிக் கண்ட கோட்பாட்டுண்மையை மேலும் உறுதியான தளத்தில் நிறுத்தப் போதுமானவை என்பது. இத்தகைய செய்திகளைத் திரட்டி ஒரு நூலாக எமக்களித்த திரு.சு.கி.செயகரனை அவரது கடும் உழைப்புக்காகப் பாராட்டுவதோடு இவ்வாறு எமது குறிக்கோள்களுள் ஒன்று நிறைவேறுவதை எளிதாக்கியமைக்காக நன்றியும் கூறுகிறேன். அவரை இந்தப் பணியில் ஈடுபடுத்தியமைக்காக காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி கூறுகிறேன்.

இறுதியாக வரலாற்று வரைவுக்கான கருப்பொருட்கள் பற்றிய ஓர் அடிப்படை கேள்விக்கு விடை காண வேண்டியிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மேலே குறிப்பிட்டவாறு “ஓடுகள், பானைகள், எலும்புகள், ஓவியங்கள் போன்றவற்றை (பருப்பொருட் சான்றுகள் என்று இவற்றைக் கூறுவர்) மட்டுமே வரலாற்று வரைவுக்குக் கருப்பொருளாகக் கொள்ள முடியும், மனிதப் பதிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது விந்தையான ஒரு வரையறை. குறிப்பாக, கண்டங்கள் முழுகியது பற்றிய கேள்வியிலேயே இந்தக் கருத்து முன் வைக்கப்படுகிறது. நிலப்பரப்பு முழுகியமை பற்றியும் கடற்கோள்கள் பற்றியும் உலகெலாம் மனிதப் பதிவுகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன; அத்தயை புவியியங்கியல் நிகழ்வுகள் இடம் பெற்றது உண்மை தான்; ஆனால் அப்போது மனித இனமே தோன்றவில்லை என்கின்றனர் புவியியங்கியல் மற்றும் மனித அறிவியல் துறையினர். அப்படியானால் இந்த மனிதப் பதிவுகள் எவ்வாறு ஏற்பட்டன? இது போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லும் வேறுவகை உயிரி எதுவும் இந்தப் புவியியங்கியல் நிகழ்வுகளின் போதிலிருந்து தொடர்ந்து மனிதன் தோன்றுவது வரை வாழ்ந்து அவனுக்குச் சொல்லவும் வாய்ப்பில்லை.[1] அப்படியாயின், ஒன்று, மனிதனின் உண்மையான தொடக்கால வாழ்விடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது புவியியங்கியல் மற்றும் மனித அறிவியல் துறைகளின் காலக்கணிப்பு உத்திகளில் மாற்றம் தேவை. இதில் இரண்டாவதைப் பொறுத்தவரை நம்மால் உறுதியாகக் கூறமுடியும், மனிதப் பதிவுகளுக்கும் புவியியங்கியலாளரின் காலக் கணிப்புக்கும் உள்ள இடைவெளி மேம்பட்ட காலக்கணிப்பு உத்திகளால் சுருங்கி உள்ளது. அதுபோல் புதிய அகழ்விடங்களால் மனிதன் தோன்றிய காலம் பின்னோக்கிப் போயுள்ளது. பண்டை வரலாற்றுவரைவென்பதில் மனிதப் பதிவுகளே முதன்மையானதும் அடிப்படையானதுமான தரவாகும். பிற தரவுகள் அதற்கு இசையவில்லையானால் அவற்றின் அணுகலில் பிழையிருப்பதாகக் கொண்டு தங்கள் உத்திகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவ்வத்துறையின் பொறுப்பாகும். இந்த உறுதியான நிலையில் நின்று நாம் திரு.சு.கி செயகரனின் நூலுள் நுழைவோம்.

திருவாளர் சு.கி.செயகரன் ஒரு புவியியங்கியல் வல்லுநர் என்ற நம்பிக்கையில் குமரிக் கண்டம் குறித்த தமிழ் மரபுக்கு வலுவான பண்பாட்டு எச்சங்கள் நம்மிடையே உள்ளன என்று கருதும் நண்பர் திரு. செயமோகன் போன்றோர் கூட அவருடையது அறிவியல் சார்ந்த அணுகல் என்றும் ஆனால் குமரிக் கண்டக் கண்டக் கோட்பாடு இன்றி இந்தியப் பண்பாடு பற்றிய பல கேள்விகளுக்கு விடை காண முடியாது என்றும் உயிர்மை இதழில் ஒருமுறை கூறியுள்ளார். ஆனால் அறிவியல் அணுகலுக்கும் செயகரனுக்கும் எட்டாத் தொலைவு.

இதுவரை தமிழார்வலர்களும் குமரிக் கண்டக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தமிழறிஞர்களும் குமரிக் கண்டம் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவற்றையும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறியிருப்பவற்றையும் மட்டுமே பெரும்பாலும் தொகுத்துத் தந்துள்ளனர். செயகரனோ குமரிக் கண்டக் கோட்பாட்டை மறுப்பவர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்லது பேரா.பண்டிதர் க.ப. அறவாணன் போன்று ஏற்றுக்கொள்வது போல் பாய்ச்சல் காட்டுபவர்களின் ஆக்கங்களில் ஈரெட்டாக இருப்பவற்றையும் வெறுமே தொகுத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே தன் கருத்துகளையும் பதிந்துள்ளார். அக்கருத்துகள் எதிலுமே அறிவியல் அல்லது புவியியங்கியல் சாயலே இல்லை. புவியியங்கியல் செய்திகள் என்று அவர் தந்திருப்பவை ஒன்றேல் காலங்கடந்தவை அன்றேல் அரைகுறையானவை, பொய்யானவை, ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. எனவே அவரது நூல் பற்றிய இத்திறனாய்வில் அவர் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் மீதான திறனாய்வு ஒரு முகாமையான இடத்தைப் பெறும். அடுத்து அவரது போலி அறிவியல் - புவியியங்கியல் முக்காடு கிழித்தெறியப்படும்.

ஓர் எச்சரிக்கை! குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவுவதற்கு இந்துமாக்கடல் எனப்படும் குமரிமாக்கடலினுள் அகழ்வாய்வு செய்யும் வேண்டுகோளைத் தமிழார்வலர்கள் முன்வைக்குமாறு சீண்டுவதற்கென்றே குமரிக் கண்டக் கோட்பாட்டைப் பழித்துரைக்கும் இதுபோன்ற நூல்கள் வெளியிடப்படுகின்றனவோ என்றொரு ஐயம் எனக்குண்டு. கடல் அகழ்வு இன்றியே குமரிக் கண்டக் கோட்பாட்டை நிறுவிட முடியும். அகழாததால் குமரிக் கண்டக் கோட்பாடு நிலைக்காமல் போனாலும் தாழ்வில்லை. நம் மண் மீதும் கடல் மீதும் அயலவர் எவரும் மேலாளுமை செய்வதற்கு நம் ஆர்வக் கோளாறுகள் காரணமாகி விடக்கூடாது! கடந்த காலத்தை விட நம் எதிர்காலம் முகாமையானது. இதுவே நம் அனைத்து நடவடிக்கைகளின் நடுப்புள்ளியாய் அமைய வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே நான் வரலாற்றை அணுகுகிறேன். உலக வல்லரசியத்திலிருந்து உலக மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு கருவியாகவே நான் என் வரலாற்று வரைவை முன் வைக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] பழைய எற்பாடு கூறுவது போல் கடவுள் மோசேவுக்குக் கூற, அதுவும் கடவுள் உண்டாக்கிய வெள்ளத்தில் அழிந்து போய், நினைவில் வைத்து மீட்டெழுதியதில் தவறுகள் நேர்ந்து விட அதனைப் “பிழை திருத்த" அவர் மீண்டுமொருமுறை முகமது நபிக்கு கூறியது போல் இருக்குமோ? ஆனால் அங்கும் ஊழி அழிவின் போது மனிதன் வாழ்ந்ததாகத் தானே கூறப்பட்டுள்ளது. மோசேக்கு ஒரு முறை வெளிப்பாடு செய்த கடவுகள் ஏன் மீண்டுமொரு முறை முகமது நபிக்கு செய்தார் என்பதற்கு முகமதிய சமயத்தின் அகமதியா பிரிவினர் தரும் விளக்கத்தையும் அதற்கு மறுமொழியாக, பழைய ஏற்பாட்டில் பிழை ஏதுவும் நேர்ந்து விடவில்லை என்று நிறுவுவதற்காக எழுதப்பட்ட Dead sea Scrolls என்ற நூலையும் பார்க்க.

0 மறுமொழிகள்: