நுழைவாயில்

சு.கி.செயகரனின் குமரி நிலநீட்சியில் அணிந்துரை வழங்கியுள்ள திரு.எசு.வி.இராஜதுரை, பெயரின் முன்னெழுத்தைக் கூட புனைந்து கொண்ட ஒரே எழுத்தாளர் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர். எனவே அவர் குமரிக் கண்டக் கோட்பாடு ஒரு தொன்மம் என்ற பொருள்பட தன் அணிந்துரைக்கு “குமரி நிலநீட்சி ஒரு தொன்மத்தின் முடிவு?” என்று தலைப்பிட்டிருப்பதில் வியப்பில்லை. ஆனால் அங்கு ஒரு கேள்விக்குறியை வைத்ததன் மூலம் தான் குமரிக் கண்டக் கோட்பாடு மறுக்கப்பட்டு விட்டதாகக் கூறவில்லை என்று அவர் வாதிடலாம்.

அடுத்து, ஆதிக்கச் சாதியினர் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிடும் பார்ப்பனர்களின் இறுமாப்பை எதிர்கொள்வதற்காகத் தமிழ்மக்கள் மிகைக் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டதாகக் கூறித் தமிழ் மக்கள் மீது பரிவு கொண்டவர் போல் தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களது இந்தத் தவற்றைப் பொறுத்தருளுமாறு “அறிவியல் அணுகலில் மிக்குயர்ந்த” நூலாசிரியரையும் அவர் போன்ற “அறிவுலக மேதைகளையும்” கேட்டுள்ளார். இவ்வாறு தமிழ் மக்கள் மீது பரிவு மிக்க எசு.வி.இராசதுரையே குமரிக் கண்டக் கோட்பாடு அறிவியல் அடிப்படை ஏதுமற்றது; அதனைத் தக்க வைத்துக் கொள்ள ஞாயங்கள் ஏதுமில்லை; அது இல்லாமலேயே தமிழர்களுக்குப் பெருமை தரும் தொல்சிறப்புகள் பலவுண்டு என்று ஆறுதல் கூறுகிறார். காவிரி போனாலென்ன, கங்கையையே இங்கு கொண்டு வந்து நிறுத்துகிறேன் பார் என்று தமிழ் நாட்டில் நிலவும் பரிசுக் சீட்டில் பணக்காரனாகிவிடலாம் என்பது போன்ற மனப்பான்மைக்கு இளைஞர்களையும் “அறிஞர்களை”யும் கொண்டு வந்து ஏமாற்றிய எம்.எசு. உதயமுர்த்தியின் வழி இது.

தமிழர்களுக்கு குமரிக் கண்டம் தவிர்த்த பழம்பெருமை பலவுண்டு என்பதற்கு எசு.வி.இராசதுரையின் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் அதற்காக எமக்கு ஐயத்திற்கிடமில்லாது உரிமைப்பட்ட குமரிக் கண்டக் கோட்பாட்டைக் கைவிட வேண்டுமென்று கேட்க எவருக்கும் உரிமையில்லை. சு.கி.செயகரன் போன்றோர் அறிவியல் என்ற பெயரில் முன்னுக்குப் பின் முரண்களைக் கிறுக்கியுள்ள ஒரு நூலினால் குமரிக் கண்டக் கோட்பாடு மறுக்கப்பட்டு விட்டது என்று இராசதுரை நம்புவது போல் நடிப்பதை ஏற்றுக் கொண்டு எம் மூதாதையர் பேணிக் காத்து வந்த எம் முந்தை வரலாற்றைக் கைவிட எந்த ஞாயமுமில்லை. பழம்பெருமை பேசியே தமிழகம் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக முரண்பாடுகளினால் தேங்கிய, அதனாலேயே எண்ணற்ற அயல் விசைகளின் மேலாளுமையைச் சுமந்து மூச்சுத்திணறி நிற்கும் ஒரு குமுகத்தை, அதன் மதிப்பை மேப்படுத்திவிட முடியாது. அதற்கு நிகழ்காலத்தின் மீதும் வருங்காலத்தின் மீதும் நம்பிக்கை வைத்துத் திட்டமிட வேண்டும். அதற்குத் தேவையான ஊக்குவிப்பை நம் போன்ற பண்டை மரபுள்ள மக்களின் உண்மையான வரலாறு வழங்கும். பெருமைமிக்க வரலாறு இல்லையென்றால் கூட உண்மையான வரலாறு நம் தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவும். எனவே எந்தச் சூழலிலும் நம் வரலாற்று வரைவில் விட்டுக் கொடுத்தலுக்கு இடமில்லை என்பதைத் திரு.எசு.வி. இராசதுரை உணர்வாராக. திருக்குறளைச் சொல்லி அவர் தப்பித்துக் கொள்ள முடியாது. பிறர் கருதுவது போல அவர் ஓர் அறிவுத்திறவோராக இருந்தால் அவர் பிறந்த, அவரை வளர்த்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்ற வேண்டிய தன் கடமையிலிருந்து எந்த வகையிலும் நழுவ முயலக் கூடாது என வேண்டுகிறேன்.

0 மறுமொழிகள்: