5. ஊரும் நகரும் ஊர், நகர்ப் பெயர்கள்
செய்யுள் வகைகளைப் பற்றிய தன்
நுண்ணறிவை வையாபுரியாரின் துணையோடு வெளிப்படுத்திய திரு.செயகரன் அடுத்து
ஊர்ப்பெயரியல் துறையினுள் இறங்கி துறை என்ற சொல்லைப் பற்றிக்
கூறுகிறார். அதற்கும் பல ஆசிரியர்களின் துணையை நாடியுள்ளார்.
“......புகார் என்பது காவிரியின் சங்கமத்துக்குரிய
பெயராக வழங்கியது. அதுபோல் குமரித் துறை என்பது பஃறுளியாற்றின் சங்கமத்துறைக்கு
உரிய பெயராக வழங்கியிருக்க வேண்டும். புகார்த் துறையின் பெயர் ஒரு ஊருக்கு ஆகி
வந்ததைப் போல் குமரித் துறையின் பெயர் அதன் கரையிலிருந்த ஊருக்கு ஆகி, குமரிக்கோடு
என வழங்கியது. கடல் கோளினால் குமரிக்கோடும் பஃறுளியாற்றின் கழிமுகப் பகுதியும்
அழிந்துவிட்டதால் புதிதாகத் தோன்றிய கடல் முனைக்கு குமரித் துறையின் நினைவாகவே
குமரித்துறை என்றும் குமரிமுனை என்றும் பெயர் வழங்கியது”
என்று பெயர் வைத்ததை நேரில் இருந்து பார்த்தவர் போல் “முனைவர்” கண்மணி என்பவர் சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் என்ற
நூலில் கூறியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் திரு.செயகரன்.
புகார் என்பது புகு + ஆறு = புகாறு→புகார்.
காவிரிப்பூம்பட்டனம் என்பது காவிரி புகும் பட்டினம். இந்த இரு பெயர்களும் இணைந்து
பூம்புகார் ஆயிற்று என்பது சிறிது சிந்தனைக்கு வேலை கொடுத்தால் புரிந்துகொள்ளலாம்.
கண்மணிதான் “முனைவர்” ஆயிற்றே. சொந்தச் சிந்தனையைச் செயற்படவிட்டால்
பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகளை ஏற்காவே! அப்புறம் அவர் எப்படி பட்டம் பெற்றிருக்க
முடியும்? பாவம் “முனைவர்”கள்!
பண்டைத் தமிழர்கள் துறைமுகங்களை நேராகக் கழிமுகங்களில் அமைத்தார்களா அல்லது ஓத
நீர், அதாவது வீங்கல், சூறாவளி அல்லது ஓங்கல்(சுனாமி) அலைகளால் அலைப்புறாமலும் மணல் திரளாமலும்
இருப்பதற்காக ஆற்றினுள் அல்லது நாம் மேலே குறிப்பிட்டவாறு நாவிக வாய்க்கால்களினுள்
அமைத்தார்களா என்று தெரியவில்லை. அதனால்தான் புகாரைத் துறை என்ற சொல்லால்
குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது. இன்றும் கடற்கரைத் துறைமுகங்களின்
பட்டறிவிலிருந்து புதிதாகக் கட்டும் துறைமுகங்களைக் கழிமுகத்தில் அமைக்காமல்
கடலுக்கு ஒருபோகாகச் செல்லும் வாய்க்கால்களினுள் அமைப்பது பல சிக்கல்களைத்
தவிர்க்க உதவும்.
எடுத்துக்காட்டாக நாம் முன்பு கூறிய
கொள்ளிடத்தின் கழிமுமாகிய பழையாற்றை எடுத்துக்கொள்வோம். இங்கு ஒரு மீன்பிடி
துறைமுகம் அமைக்க மதிப்பீடு ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறையின்
எதிர்ப்பினால் அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் கழிமுக வாயிலில்
தூண்டில் வளைவுகள் அமைத்து நீர்வழியைத் மிகவும் குறுக்கிவிடுவர் (பார்க்க படம்
எண். ). கடல் அலைகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல்களைக் காப்பதற்கான ஏற்பாடு இது.
இது ஆற்றுநீர் கடலினுள் பாயும் நீர் வழி பரப்பை மிகக் குறைத்து வெள்ளக்
காலங்களில் ஆற்றினுள் வெள்ளமட்டம் உயர்ந்து ஆற்றின் கரைகள் உடைந்து உள்நாட்டினுள்
அழிவுகள் ஏற்படுகின்றன. 2005இல், கழிமுகத்தில்
எந்தச் செயற்கைத் தடையும் இல்லாதிருந்துமே கொள்ளிடத்தின் கரைகள் உடைப்பெடுத்து கடலூர்
மாவட்டத்தில் பேரளவிலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறு அளவிலும் அழிவுகளை
ஏற்படுத்தியது நமக்குத் தெரியும். அப்படியிருக்க, தூண்டில் வளைவு அமைத்து
ஆற்றுவழியைச் செயற்கையாக மறித்தால் என்னாகும்?
கழிமுகங்கள் வழியே கப்பல்களை
ஆற்றினுள் விடுவது என்பதே தவறாகும், ஏனென்றால் நீர் ஆற்றிலிருந்து (வெள்ளக்
காலத்திலும் தாழ்வோதங்களின் போதும்) கடலினுள்ளும் கடலினுள்ளிருந்து (உயர்
ஒதங்கள், சுறாவளிகளின் போதும் ஆற்று நீர் மட்டம் கீழிறங்கும் போது அல்லது
பாய்ச்சல் இல்லாத போதும்) ஆற்றினுள்ளும்
பாய்வதால், கழிமுகத்தில் குவியும் மணல் மேடுகளான பொழிகள், அதாவது பார்களை
அகற்றுதல் அல்லது அதை அகழ்ந்து வழியைத் துலக்குதல் ஓர் இடைவிடாத் தொல்லையாகும்.
இன்றிருக்கும் தூர் வாரிகள் முற்காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே கழிமுகங்களில்
துறைமுகங்கள் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.
அது போல் இன்றைய குமரி முனையிலும்
துறைமுகம் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. ஏனென்றால் அந்த வட்டாரக் கடலில்
பாறைகள் மிகுதி. அத்துடன் கப்பல்கள் உள்நுழைந்து நங்கூரம் பாய்ச்சி நிற்கத்
தேவையான கடல் ஆழமோ அண்மைத் தாழ்நிலமோ அங்கு இல்லை.
இயற்கைத் துறைமுகங்கள் எனப்படுபவை ஆறு
கடளினுள் கழியுமிடத்தைச் சுற்றி உருவாகும் காயல்களில் வாய்ப்பான இடத்தில்
அமைவனவாகும். இங்கு கடல் மட்ட ஏற்றத்தாழ்வுகள், ஆற்றிலுள்ள வெள்ள மட்டத்தின் ஏற்றிழிவுகள்
நேரடியான திடீர்ப் பாதிப்பை ஏற்படுத்தா.
மெதுவாக ஏறி இறங்கும் நீர்மட்டத்துக்கு ஈடுகொடுத்து கலன்கள் கடலிலிருந்து நுழைந்து
வெளியேறத் தக்க ஆழமுள்ள ஓரிடத்தில் அவை அமையும்.
இன்றைய தமிழகத்தில் கடலில் கலக்கும்
இடத்தில் காவிரி ஆறு நான்கைந்து அடிகள் அகலம் கொண்ட ஒரு வாய்க்கால் போல அமைந்துள்ளது,
ஓருவேளை சிலப்பதிகாரக் காலத்துக்குப் பிறகு, குறிப்பாக வெள்ளையராட்சிக்
காலத்தில் கட்டப்பட்ட குறுக்கணைகளின் மூலம் வெள்ளக் காலங்களில் மீத்த நீர் ஆங்காங்கே
கொள்ளிடத்தை நோக்கித் திருப்பிவிடப்பட்டதால் காவிரி ஓர் முறைப்படுத்தப்பட்ட நீர்
ஓழுங்கல் (Regulated Water course) ஆகிவிட்டது போலும். ஆனால்
அது எப்போதுமே அப்படியிருக்கவில்லை.
காவிரி என்ற பெயர் எந்தக் கட்டத்தில்
அதற்கு வந்ததென்று தெரியவில்லை. கா + விரி = காவிரி. காவிரி, காவேரி என்ற இரு
பெயர்களையும் இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார், இயல் மொழியில்
காவிரி என்றும் இசைமொழியில் காவேரி என்று இசைக்காகவும் கூறுகிறார். காடெல்லாம்
விரிந்து சம வெளியில் ஓடியதால் அதற்கு இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.
கங்கை என்ற சொல் கங்கு என்ற
சொல்லிருந்து வந்தது. அச் சொல்லுக்கு எல்லை, கருந்தினை, கரை, கவர் (கவர் = இரண்டாகப்
பிரிகை), கவரேன்னேவல், மரக்கப்பு, வாழை, கழுகு, தீப்பற்றிய துரும்பு, தீப்பொறி, பக்கம், பருந்து,
பனை மட்டையின் கவை, வரம்பருகு, வரையறை என்ற பொருட்களைத் தமிழ்மொழி அகராதி
தருகிறது. இங்கு நாம் பேசிக்கோண்டிமருப்பது ஓரு
நீரேட்டத்தைப் பற்றியாகையால் கரை, வரம்பு (வரம்பு = அணை, எல்லை, ஓழுங்கு, வழி,
வரையறை (வரையறை = அளவு, எல்லை, தீர்க்கம்) போன்ற சொற்களை நாம் எடுத்துக்
கொள்ளலாம். ஆனால் இந்த நீரொட்டமோ ஓரு பேராறு. எனவே கரை (அருகு, எல்லை,
கரையென்னேவல், கானல், முடிவு வார்த்தை) என்ற சொல்லை, அதன் பொருள்களில் அருகு,
எல்லை என்பவற்றுக்காக எடுத்துக் கொண்டோம்[1].
அவ்வாறு கரைக்குள் அடங்கி நடக்கும் கங்கைக்கு மாறாகக் கரைக்கடங்காமல் காடெல்லாம்
விரிந்து பரந்து பாய்ந்ததால் அது அப் பெயர் பெற்றுள்ளது.
1961 ஆம் ஆண்டு சூலையில் குடகில்
பெய்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தஞ்சை மாவட்டத்தை அலைக்கழித்த போது
நான் கல்லணையில் இருந்தேன். அணைக்கு மேற்கிலிருக்கும் கோயிலடி[2] என்ற
இடத்தில் ஏற்பட்ட உடைப்பாலும் கல்லணை வழியாகக் காவிரியிலிருந்தும் தலையணை வழியாகவும்
கொள்ளிடத்தில் பாய்ந்த நீரால் ஏறக்குறைய 3½கி.மீ. அகலத்துக்குக் கடல்போல்
வெள்ளம் பாய்ந்து சென்றது. அந்த நீரோட்டத்தின் முழு அகலத்துக்கும் நெற்றுத்
தேங்காய்கள் மிதந்து சென்றன. கரையோரமாகச் சென்ற தேங்காய்களை மட்டும்
அணையோரத்திலிருந்த ஓருவர் வேல்கம்பு கொண்டு குத்தி பல மாட்டுவண்டிகள் பாரம்
எடுத்தார். காவிரி இரு மருங்கும் விரிந்தோடி தென்னந்தோப்புகளில் குவித்து
வைத்திருந்த தேங்காய்களை அள்ளி வந்ததே இதற்குக் காரணம்.
இப்போதைய காவிரிப் படிகை(டெல்டா)
பருத்திக் கரிசல் மண் போன்ற களிமண்ணைக் கொண்டுள்ளது. பல நூறு அடிகள் ஆழத்துக்கு
இங்கு பாறைகள் இல்லை. இது பல கோடி ஆண்டுகளுக்கு முன் அப்போதைய கடல்
மட்டத்திலிருந்து உயரத்தில் இருந்திருக்கிறது. நாம் நினைப்பதை விடப் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே, காவிரி இங்கு திருப்பப்படும் முன்பே பவானி, அமராவதி போன்ற
ஆறுகள் சுமந்து வந்த வண்டலும் கடல் மட்டம் உயர உயர நிலமட்டம் தாழத் தாழ அங்கு
நிரம்பி வந்துள்ளது. வெள்ளம் அடித்து வந்த மரங்களும் அங்கே வளர்ந்த மரங்களும் அந்த
வண்டலினுள் முழ்கியுள்ளன. அவற்றின் படிவுகளிலிருந்துதான் இன்று எடுக்கப்படும் கன்னெய்யமும் எரிவளியும் உருவாகியிருக்கின்றன. இந்த நிலப்பரப்பைப் பற்றிய
புவியியங்கியல் உண்மைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. நம் ஆட்சியாளர்கள்
வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
1971 முதல் 1976 வரை தென்காசி
வட்டத்திலுள்ள கருப்பா(நதி)ற்று அணையில் நான் பணியாற்றினேன். அங்கே மண் அணையின்
கசிவை மட்டுப்படுத்துவதற்காக, இயற்கையான மண்ணைத் தோண்டி களிப்புள்ள வேறு மண்ணை
நிரப்புவதற்கான வெட்டுப் பள்ளம் (cut - off trench) தோண்டும்
பொறுப்பில் நான் இருந்தேன், ஒரு சூழலில் நான் படிக்கத் தொடங்கிய புவியியங்கியல்
நூல்களிலிருந்து அழுத்தம், வேதியல் வினைப்பாடு முதலியவற்றால் நிலக்கரி கல்லாகவும்
கல் நிலக்கரியாகவும் மாறும் என்று அறிந்திருந்தேன். அப்பொது அங்கு ஓரிடத்தில்
உடைத்தெடுத்த கல்லில் ஒரு பகுதி நிலக்கரி போன்று கறுப்பாகவும் இன்னொரு பகுதி
வெண்மையான பளிங்கு போன்ற சுண்ணாம்புக் கல்லாகவும் இருக்கக் கண்டேன். இது பற்றி கல்கத்தாவிலிருந்த
புவியியங்கியல் தலைமை ஆய்வகத்துக்கு ஓரு மடல் எழுதி இந்தக்
களத்தை ஆய்வு செய்ய வேண்டினேன். மறுமொழி வந்தது. எப்படி? சென்னையிலுள்ள கினை
அலுவலகத்துக்கு எழுது என்று. அவர்களல்லவா எழுதிவிட்டு எனக்கு படி விடுத்திருக்க
வேண்டும்? விடுக்க மாட்டார்கள், ஏனென்றால் நம் நாட்டில்
கல்வி நிலையங்களுக்குப் போவோருக்கு நம் “ஆன்மிகர்”களுக்கு வீடுபேறு எப்படியோ அப்படி ஓரே இலக்கு ஓர் அரசுப்
பணி(அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியப் பணியையும் பல்கலைக் கழக
நல்கைக் குழு விகிதத்தில் சம்பளம் கிடைக்கும் விரிவுரையாளர் பணியையும் சேர்த்துக்
கொள்க) கிடைத்துவிட்டால் போதும். சம்பளம், படி, நல்லூதியம், ஓய்வூதியம் அனைத்தும்
அவர்கள் செய்த தவப்பயன், இனிமேல் அதற்கென்று எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி
ஏதாவது செய்ய வேண்டுமென்றால் தனியாகக் கவனிக்க வேண்டும். அல்லது தில்லியிலோ மாநிலத்
தலைநகரிலோ உள்ள ஆட்சியாளர்கள், பல்கலைக் கழகங்களின் ஆட்சியாளர்கள் வெளியார்
யாரிடமாவது பெற்ற பணத்துக்காகச் செய்யச் சொல்ல வேண்டும்.
சம்பளம், படி மற்றும் “பயன்களை”ப் பெறுவதற்கு “பொதுமைப் புரட்சி”யை நடத்துவதற்கென்று பாட்டாளிகளையும்
இந்தக் கோமான்களையும் அணி திரட்ட வடிவமைத்துக் கொடுத்திருக்கும் சங்கங்களை அமைத்து
அதன் மூலம் ஆட்சியாளருக்கு “கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப்
பெற வேண்டியதைப் பெற்று”க் கொள்வர்.”காணிக்கைப்
பெட்டி”யிலும் “அர்ச்சனைத் தட்டி”லும் போட்ட பணத்துக்கு ஆண்டவன் அருளுகிறானா என்பதைச் செத்த பிறகுதான் அறிய
முடியும். ஆனால் இந்த மண்ணுலக தெய்வங்களோ “கை மேல் பலன்” தரும்.
நான் கூறிய அணைக் களத்தில் அந்தப்
பள்ளம் தோண்டியதில் பல அரும்பொருட்களும் அரிய புவியியங்கியல் உண்மைகளும்
வெளிப்பட்டன. ஏறக்குறைய 20 அடி ஆழத்தில் ஒரு பெரும் மரத்தின் அடிப் பகுதி வேர்ப்
பகுதிகளுடன் காணப்பட்டது. அதைப் பாதுகாப்பாக மண்வாரி(Scraper)யில் ஏற்றி
அணைக் கள அலுவலகத்தின் முன் கொண்டு வைத்ததுடன் அது பற்றிச் செயற்பொறியாளரிடமும்
தெரிவித்திருந்தேன். ஒரு நாள் அவர் கூறினார், யாரோ அந்த அடிமரத் துண்டை வெட்டி விறகுக்காகக்
கொண்டு போய்விட்டனர் என்று.
அந்த மரத்து “மூடு” கிடைத்த இடத்தின் அண்மையில் 10-15 அடி விட்டமுள்ள பெரும் பாறைகளும்
அவற்றுக்கு அடியில் ஆள் நுழைந்து செல்லும் அளவு இடைவெளிகளுமான படிவுகளைக் கண்டேன்.
புவியியங்கியலில் பேய்மழைப் படிவுகள் (Torrential Sills) எனப்படுபவை இவை.
பாலைவனத்தின் இயல்பு பல ஆண்டுகளுக்கு
மழையே இருக்காது. திடீரென்று ஒரு நாள் வானமே பொத்துக்கொண்டு கொட்டும்.
பெரும்பெரும் பாறைகள், மரங்கள், விலங்குகள் அனைத்துமே மலைகளிலிருந்து ஒரு சேர
அடித்துவரப்பட்டு கீழே கொட்டப்படும். இயல்பான மழைப் பகுதிகளில் நீரோட்டங்களினால்
உண்டாகும் படிவுகள் கனத்தவையும் பெரியவையுமான பொருட்கள் அடியிலும் அவற்றைவிட
சிறியவை மேலேயுள்ள அடுக்குகளிலுமாகப் “படிமுறை”யாகப் படிந்திருக்கும். பேய்மழைப் படிவுகளில் இது போன்ற படிமுறையின்றி
பெரிதும் சிறிதுமானவை அள்ளிக் கொட்டினாற் போல் இருக்கும்.
இன்னும் Loess formations
எனப்படும் புழுதிப் படிவுகளும் நீரோட்டப் பரப்பின் விலாப்பகுதி (கரை) என்று
கருதத்தக்க இடத்தில் இருந்தது. இது பேய்க் காற்று வீசும் போது அடித்து வரப்படும்
பெரும் பரல்கள் விழுந்த பின் காற்று விரைவு குறைந்து தூசு நிலையிலுள்ள புழுதி
படிந்து காலபோக்கில் இறுகிப் போவது. இது போன்ற படிவுப் பகுதிகளில் சீனத்தில்
குடைந்து வீடுகளை அமைத்து வாழ்வதாக
புவியியங்கியல் நூல்கள் கூறுகின்றன. மண்வெட்டி, கடப்பாரை அகியவற்றுக்கு இந்த
மண் விட்டுக் கொடுக்காது. நனைந்த பரப்பில் கால் வைத்தால் சறுக்கும். குழிபோட்டு
வேட்டு வைத்தால் மேலே வைத்தூற்றி(புனல்) போன்று அரை அடி விட்டத்துக்கு ஒரு சிறு பகுதி பெயர்ந்து வரும். உடைந்துவரும்
மண்ணில் பசையே இருக்காது. இறுதியில் கடப்பாரையை வைத்து நீரை ஊற்றி அடித்து 5 அடி
ஆழமுள்ள பல குழிகளை அடுத்தடுத்துப் போட்டு அவற்றில் வெடிமெழுகை(Gelatine குச்சியை)ப் போட்டு மின்
வெடிப்பானால் ஓரே நேரத்தில் வெடிக்க வைத்தால் அந்தப் பகுதி முழுவதும் உலையும். அவ்வாறு
குழியைத் தோண்டினோம். அதன் அடியில் பீங்கான் கல் எனப்படும் Quartz வந்தது. இதை நொறுங்கிய நிலையில்தான் வெட்டியெடுக்க முடிந்தது.
நீரூற்றையும் இப் பாறை தடை செய்யவில்லை.
இது போன்ற அணைக் களங்களில் ஒரு
புவியியங்கியலாளர் இருந்தால் அவர் சம்பளம் போன்ற உடனிகழ் செலவுகள் தவிர வேறு
செலவுகள் இன்றி அந்தந்த வட்டாரத்தின் புவியியங்கியல் புலனங்களை எளிதாக
அறிந்துகொள்ளலாம். புவியியங்கியல் துறை என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களில் இருந்துகொண்டு
எந்த வேலையும் செய்யாமல் நாளை எண்ணி சம்பளம் வாங்கி உடலிலும் உள்ளத்திலும்
கொழுப்பேறி, ஏதாவது வேலை செய்ய வேண்டுமென்று நேர்ந்தால் எந்த அச்சமும் தயக்கமுமின்றி,
ஊழல் வரவும் கைக்கூலியும் கிடைக்காதென்றால் அவற்றைக் கழித்துக்கட்டிவிட்டு குடும்பம்,
மக்கள், வளமனை, ஊர்தி என்று கொழுத்து அவர்களிடத்தில் மனச்சான்று என்று ஏதாவது
இருந்து அது ஒரு நாள் விழித்துக்கொண்டு இந்தத் தீங்கெல்லாம் பிள்ளைகளைப்
பாதிக்குமோ நமக்குக் கொடு நரகுதான் கிடைக்குமோ என்று அஞ்சி நடுங்கி “மனவளக் கலை”, “தியானம்” அது இது என்று
தொழில் நடத்தும் “புவியில் இயங்கும் தெய்வங்களி”ன் பின்னால் ஓடி புண்ணியத்துக்கு அச்சாரம் போடும் அரசு அலுவலர் - ஆசிரியர்
கூட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, தாங்கள் பாடநூல்களில் படித்து தேர்வில் கக்கி அப்புறம்
மறந்துபோன வெவ்வேறு வகை மண் அடுக்குகள், கல் வகைகள், புவியியங்கியல் நிகழ்முறைகள்
ஆகியவற்றை கண்ணால் பார்த்து அறிவைப் பெறும் வாய்ப்பு இப்போதாவது கிடைக்கும்.
இது போன்ற புவியியங்கியல் புலனங்கள்
மட்டுமல்ல, தொல்பொருட் புலனங்களுக்கும் நிறைய வாய்ப்புகள் இருந்தன. மண் அணை
அமைப்பதற்கு மண்ணைத் தோண்டிய இடத்தில் முதுமக்கள் தாழிகள் எனப்படும்
கூனைகள், எலும்புகள், பிற பொருட்களுடன் கிடைத்திருக்கின்றன. மண்ணால்
செய்த உடுக்கின் உடைந்த பகுதி எனக்குக் கிடைத்தது. அங்கு பொறுப்பில் இருந்த
பொறியாளர் அந்தக் கூனைகளையும் எலும்புகளையும் நொறுக்கி மண்வாரிகளில் ஏற்றி அணையில்
கொட்டி உருளிகள் கொண்டு இறுக்கிய பின்னர்தான் இந்தச் செய்திகள் எனக்குத் தெரியவந்தன.
முன்பே தெரிந்திருந்தாலும் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்று என்
பட்டறிவிலிருந்து தெரியவந்தது. வெட்டுப் பள்ளத்திலிருந்து எடுத்த கல் துண்டுகளையும்
உடைந்த மண் உடுக்கையையும் நெடுநாள் என்னோடு னவத்திருந்தேன். சராசரியாக ஆறு
மாதத்துக்கு ஒரு முறை இடமாற்றம் பெற்றுக் கொண்டிருந்த என்னிடமிருந்து அவை எப்படியோ
தவறிவிட்டன.
பாளையங்கோட்டையில் ஏறக்குறைய 12
ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்துக்கு எதிரில் அலுவலகம் வைத்திருந்தார் தொல்பொருள்
ஆய்வுத்துறை உதவி இயக்குயர் திரு. செந்தில் செல்வக்குமரன். நெல்லை - நாகர்கோயில்
சாலையில் போக்குவரத்துக் கழகங்கள் நடத்தும் பல்தொழில்நுட்பப் பயிலகத்துக்கு(பாலிட்டெக்னிக்)த்
தெற்கில் மேற்கு நோக்கிச் செல்லும் மண்பாதையில் சிறிது தொலைவில் ஒரு மனைப்
பிரிவுப் பணிக்குச் சென்ற போது ஓரிடத்தில் கன்னங்கரேல் என்று ஓரு மரத்தின் அடித்தண்டு
கல்லாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். மனைப்பிரிவுக் களத்தில் நடுவில் துளையுள்ள
முக்கால் அடிச் சதுர அளவில் பாதி உடைந்த நிலையில் ஒரு கல் துண்டும் கிடைத்தது. அதை
எடுத்துச் சென்று அவரிடம் காட்டி அவரை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். உடைந்த
கல் துண்டைக் கண்டெடுத்த இடத்திலும் சுற்றிலும் ஒரு நுண்கற் காலக் குடியிருப்பு
இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன என்று நுண்கற் கருவிகள் என்று சிலவற்றைத் திரட்டினார்.
நான் காட்டிய கல் என்னவென்று அவரால் இனம் காண முடியவில்லை. கற்படிவமடைந்த மரம் தன்
துறையைச் சேர்ந்ததல்ல என்று கூறிவிட்டர். தான் கண்டவற்றைத் தாளிகைகளுக்குச்
செய்தியாகக் கொடுத்தார். அதில் என் பெயரை தாளிகையினர்
விட்டுவிட்டதாகக் கூறினார். அவரை நம்பலாம். தாளிகைச் செய்தி ஆசிரியர்களுக்கும்
எத்தனையோ நெருக்கடிகள்.
நம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன
எல்லா வகைத் தடயங்களும் சான்றுகளும். ஆனால் ஒருங்கினைப்புதான் இல்லை. என்ன,
ஒருங்கிணைப்பு இல்லையா? இருக்கிறது இருக்கிறது, நம் ஆட்சியாளர்கள், நம்
நன்மைக்காக, நம் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நேரடியான ஒருங்கிணைப்புதான் இல்லை
என்றேன். அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள், ஒன்றிய நாடுகளவை(ஒ.நா.) மூலமும் உலக வங்கி
தொடங்கி அனைத்து “வளர்ச்சி” வங்கிகளுக்கும்
“உதவி”(எயிட்சு என்று படிக்க) வழங்கும்
அனைத்து நாடுகளுக்கும் நம் ஆட்சியாளர்களுக்கும் தேவையான புலனங்களைத் திரட்டவும்
பிற ஆயத்த ப்பணிகள், பணி முடிப்புகள்(தடயம் அழிப்புகளையும் சேர்த்து) என அனைத்தையும்
நேரடியாகவும் நம் ஆட்சியாளர்கள் மூலமும் நிறைவேற்றுவதற்குரிய சீரிய ஒருங்கிணைப்பு
சிறப்பாகவே செயற்படுகிறது. காந்தி “மகாத்மா” தன் இன்னுயிர் கொடுத்து நிலைநிறுத்திய, “ஆசிய சோதி” நேரு பெருமான், “ரோராசாவின் ராசா” செயற்படுத்திக் காட்டிய, “அன்னை” இந்திராவும் “மகான்” வாசுபேயியும்
மன்மோகனும் அவ் வழி நடக்க “அறிவியல் மாமேதை”, தெற்கே தோன்றிய “அறிவியல் விடியல்” அப்துல் கலாம் “கனவு காண” “பகுத்தறிவு குட்டிப் பகலவன்” “கலைஞர்” கருணாநிதி விரைந்து செயலாக்க, இந்த ஒருங்கிணைப்பு நன்றாகவே நடந்தது,
நன்றாகவே நடக்கிறது, நன்றாகவே நடக்கும். நமக்குத்தான் தெரியவில்லை. அத்தகைய ஒரு ஒருங்கிணைப்பின்
வெளிப்பாடுதான் காலச் சுவடு - சு.கி. செயகரனின் கூட்டணியின் இந்த ஆக்கம்.
காவிரி ஆற்றுப் பரப்பு மட்டுமல்ல
பாலாறு கழியும் மரக்காணம் வட்டாரத்தில் கூட 700 அடிவரை பாறை எதுவும் தென்படவில்லை
என்பது 1967 வாக்கில் அங்கு துளையிட்டுப் பார்த்த நிலநீர் ஆய்வாளர்கள் கூற்று.
குமரி மாவட்டம் அகத்தீசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள மலையில்லாப் பகுதிகளில்
சராசரியாக 150 அடிவரை கருங்கற்பாறை இல்லை என்பது உள்ளிட்ட இச் செய்திகள் இப் பகுதி
கடலுக்குள் தாழ்ந்துள்ளது அல்லது கடல் மட்டம் உயர்ந்துள்ளது அல்லது இரண்டுமே
நடந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
காவிரி கடலினுள் புகும் இடத்துக்கு “புகார்த் துறை” என்று
வழங்கியது என்று “முனைவர்” கண்மணி
கூறியதை அப்படியே விழுங்கிவிட்டு அதை அப்படியே நம் மீது வாந்தி எடுக்கிறார்
திருவாளர் சு.கி.செயகரன். “குமரிக் கண்டம்” என்ற சொல் எந்தப் பழைய இலக்கியத்தில் பதிவாகியுள்ளது என்று துருவித்
துருவி கேட்கும் அந்தப் பெரும் ஆய்வாளர், “புகார்த் துறை” என்ற சொல் எந்த இலக்கியத்திலாவது பதிவாகியுள்ளதா என்பதையும் தேடிக்
கண்டுபிடித்திருந்தால் அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இல்லாத
ஒரு சொல்லை வைத்துக்கொண்டு “குமரியம் பெருந்துறை” என்ற சொல்லுக்கு “முனைவர்”
கண்மணி கூறியுள்ள விளக்கத்தைப் பற்றிக்கொண்டு செல்கிறார் அவர்.
இனி, அடியார்க்குநல்லார் அதனை ஆற்றுத் துறை என்று கூறியதைப் பற்றிப்
பிடித்துக் கொண்டதுடன், மயிலை சீனி வெங்கடசாமி, குமரியாறு, கி.பி. முதல்
நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கடல்கொண்டுவிட்டதாகக் கூறுவதையும் கெட்டியாகப்
பிடித்துக்கொள்கிறார். முனைவர் அவர்கள் முதலில் குமரித் துறை என்பது “பஃறுளியாற்றின்
சங்கமத் துறை” என்று கூறியிருக்க அதை அப்படியே விட்டுவிட்டு,
அப்படியே கா.அப்பாத்துரையாரின் கூற்றுக்குத் தாவி குமரித் துறை என்பது குமரியாறு
கடலில் மூழ்கியதால் குமரிக் கடற்கரைக்கு வழங்கிய பெயர் என்று கூறியதைப் பிடித்துக்கொள்கிறார்.
இறுதியில் வித்துவான் செ.சதாசிவம் அவர்களின்
சேரநாடும் செந்தமிழும் நூலைப் பிடித்துக் கொண்டு பழையாறுதான் பஃறுளியாறு
என்று முடித்து, “கடல்மட்டம் தாழ்ந்திருந்த பத்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன் கடற்கரையில் மேலும் 25-30 கி.மீட்டர் வரை ஓடிக் கடலில்
கலந்திருக்கலாம்(?!), ஏனெனில் அன்றைய கடற்கரை, இன்றைய குமரியிலிருந்து
25-30 கி.மீ. தெற்காகத் தள்ளியிருந்தது. (இங்கு மட்டும் “லாம்” போட்டு “தள்ளியிருக்கலாம்”
என்று கூறியிருக்கலாமே, புவியியங்கியல் புலியே!) பின்னர் கடல் மட்டம் உயர ஆற்றின்
இப் பகுதி கடலில் போயிருக்கலாம் இப் பகுதியில் ஆழ்கடலாய்வு
மேற்கொண்டால் இதுபற்றி மேலும் அறியலாம்.”
இதுதான் புவியியங்கியல் புலி சு.கி.செயகரனின் ஆய்வுப் பெருமை. இரப்பாளியின்
கக்கல் (பிச்சக்காரன் வாந்தி) என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? அதற்கு
ஓர் இரப்பாளியின் பின்னால் சென்று அவன் கக்கும் நேரத்துக்காகக் காத்திருக்கத்
தேவையில்லை. திருவாளர் சு.கி.செயகரனின் நூலைப் படித்தால் அடிக்கடி, அடிக்கு அடி அந்தக்
கக்கலைக் காணலாம். இரப்பாளியின் கக்கலைப் பற்றிய உங்கள் அறிவு தழைத்தோங்கும்.
இதற்கிடையில் துறை என்ற சொல்லைப்
பற்றிய ஆய்வு வேறு. திரு.கு.பகவதி என்பவரின் இலக்கியத்தில் ஊர்ப் பெயர்கள்
என்ற நூலையும் ஒரு கடி கடித்திருக்கிறார். “மேற்கூறியவற்றிலிருந்து துறை என்பது பொதுவாக
ஆற்றின் கரையிலமைந்த பகுதியையே குறிக்கும் என்பது தெளிவு”
என்று நமக்குத் தெளிவையும் ஊற்றித் தருகிறார். இந்தத் “தெளிவு” குடித்ததனால்தான் அவருக்குக் கக்கலே வந்தது போலும். ஐயா, புவியியங்கியல்
புலியே குமரி மாவட்டத்தில் புத்தன்துறை(புதியதுறை) கேசவன் புத்தன்துறை, இரயுமன்துறை
என்று மீன் பிடிப்பதற்காகக் கட்டுமரம் புறப்படும் இடங்களுக்குப் பெயர் இருப்பதைத்
தெரிந்துகொள்ளுங்கள். எனவே குமரிக் கடலில் துறை இருந்திருப்பதற்கு எந்தத் தடையும்
இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இதில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட
வேண்டும். “பக்தி இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள்
ஆகியவை குறிப்பிடும் ஊர்ப் பெயர்களை ஆராய்ந்த கு.பகவதி (இலக்கியத்தில்
ஊர்ப்பெயர்கள் பக்.41,108) தொகுப்பில் உள்ள ‘துறை’ எனக் குறிக்கப்படும் இடங்கள் “சில” வருமாறு: என்று குறிப்பிட்டு ஆறுகளின் கரைகளில் அமைந்து, துறை என்ற முன்,
பின் ஒட்டுகளைக் கொண்ட “சில”(வலியுறுத்தம் எமது) ஊர்களின் பெயர்களைக் காட்டுகிறார். அப்படி இருந்தவற்றில்
கடற்கரையில் அமைந்த துறை என்னும் அடைமொழியுடைய ஊர்ப் பெயர்களும் இருந்திருக்கும்.
அவற்றை அவர் மறைத்திருக்கிறார் என்பது உறுதி. புவியியங்கியல் புலியின் நேர்மையை
நாம் போகப் போகப் காணலாம்.
திருவாளர் சு.கி. செயகரன்
மேற்கொண்டுள்ள நூல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு
நோக்கங்களுக்காக எழுந்தவை. அடியார்க்குநல்லார், குமரியம் பெருந்துறை அயிரைமாந்தி என்ற புறநானூற்று வரியை
மனதில் கொண்டு உரை எழுதியதால், சிலப்பதிகாரத்தில் வரும் குமரியம்
பெருந்துறைக்கும் ஆற்றுத்துறை என்று பொருள்கொண்டுள்ளார். அயிரை என்பது நன்னீர் மீன் என்பதை நாம் முன்பு
சுட்டிக்காட்டியுள்ளோம். மயிலை சீனி வெங்கடசாமி எந்த நூலில் குமரியாறு கி.பி. முதல்
நூற்றாண்டில் கடலால் கொள்ளப்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறுவதாகக்
கூறியுள்ளார் என்பதைத் திருவாளர் சு.கி.செயகரன் குறிப்பிடவில்லை. அப்படித்தான்
அவர் கூறியிருக்கட்டுமே அதன் சரி தவறுகளைப் “புட்டுப் புட்டு”
வைக்க வேண்டியதுதானே புவியியங்கியல் புலியின் பணியாக இருந்திருக்க வேண்டும்! “இப் பகுதியில் கடலாய்வு மேற்கொண்டால் இது பற்றி மேலும் அறியலாம்” என்று சொல்ல இவர் எதற்கு? ஆனால் சிலப்பதிகாரம் காடுகாண் காதையில்
மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்தி கூறியதாகக் கூறிய நிகழ்ச்சிகளில் அப்போதைய
பாண்டியனின் முன்னோர்கள் காலங்களில் நிகழ்ந்தவையும் அடங்கும் என்பது தமிழ்
இலக்கியங்களில் தடம்பிடிக்கத்தக்க மரபு. இந்த அடிப்படையில் மயிலை சீனி
வெங்கடசாமியாரின் அணுகல் இல்லையானால் அதைப் புறக்கணிக்க வேண்டியது ஒரு நேர்மையான
ஆய்வாளரின் பணி. இவரிடம் இந்த மரபு பற்றிய அறிவும் கிடையாது என்பது உறுதியாகத்
தெரிகிறது. அடுத்து இவர் பல்கலைக் கழக ஆய்வேடுகளில் போன்று
ஏதோவோர் ஆசிரியரின் ஏதோவோர் கூற்றை எடுத்துச்
சான்றாகச் சொல்லிவிட்டால் அவர் சொல்லும் கூற்றுகள் எல்லாம் பல்கலைக்
கழகங்களில் போல் மக்கள் மன்றத்திலும் அரங்கேறும் என்று கற்பனை செய்துகொண்டார்
போலும். பல்கலைக் கழகங்களால் கருத்துச் சிதைக்கப்படாத இன்னும் சிலர் தமிழக மக்களில்
எஞ்சியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியிருக்காது.
அடுத்து வித்துவான் செ.சதாசிவம்
அவர்களது நூல் இன்றைய குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற போராட்டம்
கருக்கொண்ட காலத்தில் வரலாற்றாய்வாளருமான கவிமணி தேசிகவினாயகரின் வழிகாட்டலில்
எழுந்த ஒன்று. அப் போராட்டத்தைக் கைக்கொண்ட திருவிதாங்கூர் தமிழ்நாடு பேரவை(காங்கிரசு)க்
கட்சியின் வேண்டுகைப்படி அமைந்த பகுதி பண்டை நாள் முதல் தமிழகப் பகுதிதான்,
கடல்கொண்ட தமிழகத்தின் எஞ்சிய பகுதிதான் என்பதை நிலைநாட்டும் நோக்கத்துடன்
எழுதப்பட்டது. இருந்தாலும் அவரது அணுகல்கள் திருவாளர் சு.கி.செயகரனுடையதைப் போல்
நேர்மைக்குப் புறம்பான கற்பனைகளைக் கொண்டதல்ல. பழையாற்றுக்கும் பறளியாறு என்ற
இன்னோர் ஆற்றுக்கும் உள்ள உறவைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்த
ஒரு கல்வெட்டால் இந்தக் குழப்பம் நேர்ந்துள்ளது. இது குறித்து திரு. ம.எட்வின்
பிரகாசு எழுதியுள்ள கோட்டாறு பஃறுளியாறான கதை என்ற கட்டுரையை(புதிய பார்வை)ப்
பார்க்க.edwinsir.biogspot.com
வலைப் பக்கத்திலும் பார்க்கலாம்.
ஊர்ப் பெயர்கள் ஆய்வு பற்றிய அண்ணனின்
அரும்பெரும் கண்டுபிடிப்புகளின் அலசலை முடிக்கும் முன் இது பற்றிய ஒரு முகாமையான
செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் மிகப் பெரும்பாலான ஊர்களின் பெயர்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வழங்கப்படுகின்றன. சில பெயர்கள் ஒரே வகையான
காரணத்தால் அமைந்தவை. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு புதூர், மணலூர் மண(ல்) விளை
என்ற பெயர்களையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சிந்தாமணி என்ற பொருள்ள ஊர்கள்
பல இடங்களில் உள்ளன. அவை பெரும்பாலும் ஒரு பேரூரின் விளிம்பில் அமைந்திருப்பதையும்
காணலாம். தாமிரபரணி ஆறு கூட குமரி மாவட்டத்திலும் ஒன்று உள்ளது. நெல்லை மாவட்டத்து
ஆற்றின் இன்னொரு பெயரான தண்பொருனை என்பது சேரனின் வஞ்சி நகரத்தில் ஓடிய ஆற்றின்
பெயராகவும் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒற்றுமைகள் பெரும்பாலும்
இடப்பெயர்ச்சிகளின் அடையாளங்களாகும். ஓர் ஊரிலிருந்து குடிபெயர்ந்து இன்னோர்
இடத்தில் அமரும் மக்கள் தாங்கள் புதிதாகக்
குடியமர்ந்த இடத்துக்குத் தங்கள் பழம்பதியின் பெயரைச் சூட்டலாம். எடுத்துக்காட்டாக
சூரங்குடி,
இராசக்க(ள்)மங்கலம். அடுத்து அரசியல் பெயர்கள், காந்திநகர், நேருநகர், அண்ணாநகர்,
கருணாநிதி நகர், ம.கோ.இரா. நகர் என்பவை போன்று மீனாட்சிபுரம், தளவாய்புரம் என்று
எண்ணற்றவை. சாதி அடிப்படையில் அமைந்தவை கக்கன் நகர், காமராசகர் நகர், தமிழீனத்
தலைவர் புண்ணியத்தில் செயில்சிங் நகர்(விசுவகர்மர்கள்), வ.உ.சி. நகர் போன்றவை. ஆக
இதனையும் கணக்கிலெடுத்தால் பறளியாறு, தாமிரபரணி என்பவை கடல்கொண்ட மண்ணில் ஓடிய
ஆறுகளின் நினைவாக அங்கிருந்து பெயர்ந்துவந்த மக்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் வைத்த பெயர்களாகவும் இருக்கலாம் என்பது நேர்மையுடன் சிந்தனைத் திறனும்
உள்ளவர்க்கு விளங்கும்.
காவிரியின் கழிமுகத்தைப் பொறுத்தவரை
அதைத் துறை என்று சிலப்பதிகாரம் குறிப்பிடவில்லை. வளந்தலை மயங்கிய
துளங்குல இருக்கை, (கடலாடுகாதை வரி 154) அதாவது கப்பல்கள்
அசைந்தாடிக் கொண்டிருக்கும் துறைமுகங்களில் சோலை சூழ்ந்த இடங்களில் என்றுதான் குறிப்பிடுகிறது.
“துறைமுகம்” என்பது கடற்கரையாயினும் ஆற்றங்கரையாயினும் கப்பல் வந்து நிற்கும் இடம். “துறை” என்பது அதையும் குறிக்கலாம், மற்றும் பல்வேறு
நோக்கங்களுக்காக கடலிலும் ஆற்றிலும் இறங்கும் இடங்களையும் குறிக்கலாம். ஆற்றில்
குளிப்பதற்கான இடங்களையும் காட்டில் விலங்குகள் நீரருந்த வழக்கமாக இறங்கும்
இடத்தைக் கூடக் குறிக்கும்.
கடலில் துறைமுகங்கள் அமைந்த
ஊர்களுக்குப் பின்னொட்டாக வரும் பெருவழக்கிலுள்ள சொல் பட்டினமாகும். குமரி மாவட்டத்தின்
தேங்காய்ப்பட்டினம், கடியப்பட்டனம் தொடங்கி கிழக்குக் கடற்கரையில் காயல்பட்டினம்,
அதிராம்பட்டினம், நாகப்பட்டினம் என்று எத்தனையோ பட்டினங்கள் உண்டு. அதில்
ஒன்றுதான் காவிரிப்பூம்பட்டினம், காவிரி புகும் பட்டினம். கடலோ, ஆறோ இல்லாத
இடங்களில் கூட பட்டினம் என்ற ஒட்டோடு ஊர்ப்பெயர்கள் இருக்கலாம். அவை மக்களின்
இடப்பெயர்ச்சியால் அப் பெயர் பெற்றவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். “முனைவர்” கண்மணி கூறியுள்ளது போல் புகார்த்துறை என்ற பெயரில் ஊர் எதுவும் யாம்
அறிந்து இல்லை.
கன்னியாகுமரி என்று இன்று நாம்
அறியும் ஊருக்கு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கன்னி”மா”குமரி என்ற பெயர் இருந்துள்ளதை அங்கு செயல்பட்ட ஒரு சத்திரத்தின் கணக்கு
ஏடுகளின் குறிப்பிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் ஆபிரகாம் லிங்கன்
என்னும் கார்மெல் பள்ளியின் ஆசிரியர். அது மட்டுமல்ல, வித்துவான் செ.சதாசிவம்
அவர்களின் சேரநாடும் செந்தமிழும் நூலில் தரப்பட்டுள்ள ஒரு மலையாளக் கல்வெட்டுச்
செய்தியிலும் கன்னிமாகுமரி என்றே கூறப்பட்டுள்ளது. இது குமரி அம்மனைக்
குறிக்கும் சொல்லாகும். கன்னியாகிய பெரிய அல்லது பெருமை மிக்க குமரி
என்பது அதன் பொருள், உச்சிமாகாளி என்பது போல். உச்சி, மா ஆகியவை
பெருமையைக் குறிக்க அடுக்கிவந்த சொற்கள். ஆக, குமரி அம்மனின் பெயரில்தான்
அந்த இடத்துக்குப் பெயர் வழங்கி வந்துள்ளது தெளிவு. அப்படி இருக்க குமரி ஆற்றையும்
குமரிக் கோட்டையும் குறிப்பதாகக் குமரித்துறை என்ற சொல்லைக் காட்ட முயன்றுள்ள
சு.கி.செயகரனின் முயற்சி வேடிக்கையாக இருக்கிறது. இந்தக் கோயில் பற்றிய
குறிப்புகள் கிறித்துவ ஊழியின் தொடக் கால யவன ஆசிரியர்களின் குறிப்புகளிலேயே
காணப்படுகின்றன. குமரித்துறை என்பது குமரியம்மன் கோயில் அமைந்துள்ள கடல் பகுதியில் நீராடு துறையில் குளித்து அம்மனை
வழிபடுவதாகும். அங்கிருக்கும் பாறைகளால் அங்கு துறைமுகம் அமைக்க முடியாது என்று
ஏற்கனவே சொன்னோம். ஆக தான் மேற்கொண்ட தலைப்பாகிய குமரிநில நீட்சி என்பதற்கேற்ப தரவுகளை வளைத்து நெளித்துக்
காட்டி அவரை அமர்த்தியவர்களின் மனங்களைக் குளிரச் செய்ய முனைந்துள்ளார் திருவாளர்
செயகரன் என்பது தெளிவாக விளங்குகிறது. அதுமட்டுமல்ல, குமரியம் பெருந்துறை
கொள்கையில் படிந்து என்பதில் “கொள்கை” என்பது தென்புலத்தார் கடன் தீர்க்கும் சடங்கு என்றும் அது சார்ந்த
நோக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். இராமேசுவரத்துக்கு வட இந்தியாவிலிருந்து
வருவோரும் அங்கு தென்புலத்தார் கடன் ஆற்றவே கடலாடுகின்றனர். அந்த அடிப்படையில்
குமரி ஆறு, குமரி மலை ஆகியவை அடங்கிய குமரிக் கண்டத்தில் கடற்கோளால் அழிந்த
மண்ணுக்கும் மக்களுக்கும் நினைவாக நிற்கும் அம் மண்ணின் தெய்வம்தான் கன்னிமாகுமரியிலுள்ள
குமரியம்மன். அதனால்தான் அந்தக் கடல் பகுதியைத் தொடியோள் பெளவம் என்கிறார்
இளங்கோவடிகள். தொடியோள்
என்பது பெண்ணையும் பெளவம் என்பது ஆழ்கடலையும் குறிக்கிறது. இதுவும் அவர்
குறிப்பிடும் குமரியம் பெருந்துறை ஓர் கடல்துறை என்பதற்கு ஐயத்திற்கு இடமில்லாச்
சான்றாகும். கடற்கோளுக்கு முன்னிருந்த குமரியாற்றையும் கடற்கோளுக்குப் பின்னிருந்த
முனையில் குமரியம்மன் பெயரிலமைந்த ஊர்ப்பெயரையும் குழப்பி உரையாசிரியர்கள்,
குறிப்பாக வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரை விளக்கம் கொண்டது[3]
திருவாளர் சு.கி.செ.யின் திருப்பு, வளைப்புகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. குமரி
ஆறும் மலையும் வேறு குமரிமுனை வேறு.
“உன் நண்பர்களைக் காட்டு; நீ யார் என்று சொல்கிறேன்” என்று ஒரு ஆங்கிலச் சொலவடை உண்டு. அதற்கேற்பத் தனக்கேற்ற அறிவுக்
கழுந்துகளைத்தான் திருவாளர் செயகரன் தேர்ந்தெடுத்துள்ளார். முனைவர் கண்மணி என்பவர்
குமரிக்கோடு என்பதைக் குமரியாற்றின் கரை என்று பொருள்கொண்டிருப்பது மேலே நாம்
காட்டியுள்ள அவரது மேற்கோளிலிருந்து தெரிகிறது. கோடு என்ற சொல்லுக்கு கரை என்றொரு
பொருளிருக்கிறது என்பதற்காக இப்படியா? பன்மலை
அடுக்கத்துக் குமரிக்கோடு என்று இளங்கோவடிகள் தெளிவாகக்
கூறியிருந்த பின்னுமா? உங்கள் மழுமண்டைத்தனத்துக்கு அல்லது கயவாளித்தனத்துக்கு
எல்லையேயில்லையா? கோட்சுட்டப்பட்ட நூல் ஓர் ஆய்வேடாக இருந்தால் அதை ஏற்றுக்கொண்ட
பல்கலைக் கழகம், வழிகாட்டியவர், மதிப்பிட்டவர்கள், நேர்கண்டவர்கள் அனைவரையும்தான்
கேட்கிறேன்.
திருவாளர் செயகரனுக்கு ஒருவகையில்
தமிழன்பர்கள் நன்றி சொல்லியாக வேண்டும், இது போன்ற ஆய்வுச் சாய்கடையினுள் மூழ்கி
அகற்ற வேண்டிய குப்பைகளையும் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியே விடப்படும் இது
போன்ற நச்சு மாசுகளையும் தேடியெடுத்து நம் பார்வைக்கு வைத்துள்ளாரே அதற்காக.
கழக இலக்கியங்களில் கடற்கோள்கள் பற்றிய விரிவான செய்திகள்
இல்லாமல் போனதற்கு அவற்றைத் தொகுத்தோரின் வந்தேறி அரசியல் நிலைப்பாடு ஒரு
காரணமானால் இன்னொரு முகாமையான அரசியல் பின்னணியும் உண்டு. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
மிகவும் கலவரமான ஒரு அரசியல் - குமுகியல்
சூழலை நம் கண் முன் கொண்டு வருகின்றன. மதுரையில் அரசியும் அரசனும் சாகின்றனர்;
தலைநகரம் பற்றி எரிகிறது. அதற்கு ஒரு வாணிகர்
குலப்பெண் காரணமாகிறாள். அவளுக்குச் ‘சாந்திசெய்ய’வென்று பொற்கொல்லர் ஆயிரவரைக் ‘களவேள்வி’ செய்து பட்டத்து இளவரசன்
அரியணையேறுகிறான். பூம்புகாரில் பட்டத்து இளவரசன் கமுக்கமாகக் கொல்லப்படுகிறான்.
அதற்கு வாணிகன் மகளான மணிமேகலையோடு தொடர்பு உள்ளது. அரசனின் இன்னொரு மகனான நாகநாட்டுப் பீலிவளையின் மகன் வாணிகக் கப்பலில் அழைத்து வரும் போது காணாமல்
போகிறான். கணிகையான மாதவி குலமகள் போல் ஒரே ஆடவனுடன் வாழ விரும்புகிறாள்; அவள்
மகள் துறவு மேற்கொள்வதுடன் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியும் செய்கிறாள்.
புத்த சமயம் சார்ந்த இலங்கையை ஒட்டிய இரத்தினபுரி என்று அடையாளம் காணப்பட்ட
மணிபல்லவத்துக்குச் சென்று திரும்புகிறாள். அன்று இலங்கையை ஆண்ட கயவாகு
பன்னீராயிரம் சிங்கள வீரர்களைத் தன் தந்தையின் காலத்தில் கரிகாலன் சிறைப் பிடித்து
வந்ததற்குத் தான் பூம்புகாரை அழித்துப் பழிதீர்த்துக் கொண்டதைப் பதிந்து
வைத்துள்ளான்[4]. இது
மணிமேகலையின் நடவடிக்கைகளைப் பயன்படுத்தித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.
மணிபல்லவத்திலிருந்து பெற்ற அமுதசுரபி என்பது கயவாகு அளித்த உணவுப் பொருளாக இருக்க
வேண்டும்[5]. இந்திரவிழா எடுக்காததால் கடல் கொதித்து
பூம்புகாரை அழித்தது என்பது கடல்வழி வந்த கயவாகுவின் செயலை கடல் மீது ஏற்றிக் கூறியதாக இருக்க வேண்டும் அல்லது அதற்குச் சற்று முன்னோ பின்னோ கடற்கோள்(ஓங்கலை)
நிகழ்ந்திருக்கவும் கூடும். இது பற்றிய திட்டவட்டமான முடிவைத் திரு.சு.கி.செயகரன்
போலின்றி, தன் துறை பற்றிய தெளிவும் நேர்மையான அணுகலும் கொண்ட ஒரு புவி
இயங்கியலாளரால் கூற முடியும்.
இந்தப் பின்னணியில்தான் வாணிகர்கள், குறிப்பாகக் கடல் வாணிகர்கள் கைகளில் செல்வம்
திரள்வது அரசனும் அவனோடு சேர்ந்த ஒட்டுண்ணிகளும் செலுத்தும் ஆதிக்கத்துக்கு
அறைகூவலை உருவாக்கும் என்ற அரசியல் பாடம் ஆட்சியாளர்களுக்கு உறைத்தது. அரசர்களுக்கு இணையாக அல்லது மேலாகக் கூட
வாணிகர்கள் உயர்ந்துவிட்டனர். ‘அரைசு விழை திருவின்’ என்றும் ‘அரசகுமரரும் பரதகுமரரும்’ என்று இவ் விரு
சாரரையும் ஒப்பவைத்தும் இளங்கோவடிகள் கூறுவது காண்க. அது மட்டுமல்ல அரச கணிகைக்கு
நாளொன்றுக்குக் கொடுக்க வேண்டிய 1008 கழஞ்சு பொன்னைக் கொடுக்க இயலாமல் அவளை ஒரு
வாணிகன் பெறும் நிலை உருவாகியிருந்தது.
அது
போல்தான் பொற்கொல்லரும். ‘நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர’ அரசனுக்கு நெருக்கமான பொற்கொல்லன் வீதியில் செல்வதை மதுரையில்
காட்டுகிறார் அடிகள்.
அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரையில புறத்
தென்மனார் புலவர் என்ற தொல்காப்பிய வரிகள் கூறுவது போல் அகத்திணை ஒழுக்கத்துக்குத்
தகுதியற்றவராக(ஒழுக்கங் குன்றியவராக)ப் பார்க்கப்பட்ட பொற்கொல்லர் தம் குமுக
இழிநிலையை ஒழிப்பதற்காகப் போராடியதன் எதிர்வினையாகத்தான் ஆயிரம் பொற்கொல்லர்
படுகொலையையும் காண வேண்டும்.
மக்களின் கைகளில் செல்வம் திரளுவதை பொதுவாக எந்த அரசும்
விரும்புவதில்லை. ஆனால் பதியப்பட்டுள்ள வரலாற்றில் ஒரு விதிவிலக்காக ஐரோப்பாவில்
சிலுவைப் போர்கள், இங்கிலாந்து மன்னன் என்ரி போப்பை எதிர்த்து சமயத்தை உடைத்து
வெளியேறியது, மார்ட்டின் லூதர் தூண்டிய ‘கிறித்துவத் தேசியம்’, அறிவியல்
சிந்தனைகளுக்கு எதிராக வாட்டிக்கன் கட்டவிழ்த்து விட்ட வன்முறை, ஐரோப்பியக்
குறுநில மன்னர்களின் இடைவிடாத சண்டைகள், முகம்மதியர் துருக்கியைக் கைப்பற்றியது,
அதன் மூலம் ஐரோப்பிய வாணிகம் அராபியர் கையில் சிக்கியது, ஐரோப்பாவினுள்
கிறித்துவக் கோட்பாடுகளைப் புறந்தள்ளி முகம்மதியக் கோட்பாடுகள் செல்வாக்குச்
செலுத்தியதால் ஏற்பட்ட குழப்பமும் கொந்தளிப்பும், தங்களுக்கு இன்றியமையாத
பண்டங்களை அராபியரின் இடையீடின்றி கீழைநாடுகளிலிருந்து கொண்டுவர வேண்டிய உடனடித்
தேவை, அதனால் புதிய கடற்பாதை
கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம், அதற்காக அறிவியலாளரின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள
வேண்டிய நெருக்கடி, அமெரிக்காவையும் கீழைநாடுகளுக்குச் செல்வதற்கான கடல்வழிப்
பாதையையும் முறையே பெயினும் போர்ச்சுக்கல்லும் கண்டுபிடித்து அங்கிருந்தெல்லாம்
செல்வத்தைத் தம் நாடுகளுக்கு அள்ளி வந்ததைப் பார்த்துப் பிற ஐரோப்பிய நாடுகளும்
களத்தில் இறங்கியது, மன்னன் என்ரி கலைத்த மடாலயங்களின் சொத்துகளைப் பெற்றவர்களின்
வழியாகத் திரண்ட மூலதனம் ஆகியவற்றால் வலிமை பெற்ற ஐரோப்பிய வாணிக வகுப்பு
பிரிட்டனிலும் பிரான்சிலும் அரசர்களின் தலைகளைக் கொய்து அவர்களின் அதிகாரத்தைப்
பறித்து அறிவியல், தொழில்நுட்பம், தொழில்வளர்ச்சி என்று ஒரு புறத்தில்
முதலாளியத்தையும் மக்களாட்சி என்று தொடங்கி பல்வேறு மனித உரிமைக் கோட்பாடுகளையும்
உலகுக்குத் தந்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் கழகக் காலத்தின் இறுதியில் வளர்ச்சி
பெற்றிருந்த வாணிக வகுப்புக்குத் தனக்குரிய ஒரு தலைமையை உருவாக்க இயலவில்லை,(இன்றும்தான்). மக்களுக்கிருந்த
மனக்குறைகளை, மனக்குமுறல்களைக் கருப்பொருளாக்கி ஆட்சியாளர்களுக்கெதிராகப்
போராட அவர்களால் இயலவில்லை. ஒரு புறம் இலங்கைக் கயவாகுவின் படைக்கலமாக நுழைந்த
புத்தத்தைச் சாத்தனார் போன்ற அறிவாளிகள் பற்றிக் கொண்டு தொங்க, நாட்டின் நிலைமையறிந்த இளங்கோ அரசுரிமைப் போட்டிக்காக அண்ணனை
எதிர்த்தவன் என்ற பழி வரும் என்று
அஞ்சியோ என்னவோ துறவை மேற்கொண்டுவிட்டார். சமணத்தின் மூலமாக கலிங்கர் போன்ற
அயலவர்களின் ஒற்றர்கள் மலைக் குகைகளில் இருந்துகொண்டு மக்களைத் தம் பக்கம்
திரட்டுவதைத் தடுக்க இவர் போன்றோர் எதுவுமே செய்யவில்லை. நம் நாட்டு அறிவாளிகளின்
இந்தப் பேடிமை தமிழகத்தில் இன்றும்
தொடர்கிறது.
திராவிட இயக்கத்தின் இரண்டகத்தால் கைவிடப்பட்ட தமிழகத்தின்
ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழகத் தேசியத்துக்குப் புறம்பாக இந்திய அளவில் புத்தத்தைத்
தழுவ அவர்களின் சில தலைவர்கள் வழிகாட்டுவது அதன் மூலம் இன்று பொருளியலில் ஆதிக்கம்
செலுத்தத் தொடங்கியிருக்கும் சப்பான், சீனம்
அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தோதான மனநிலையை உருவாக்கவும் ஈழத் தமிழர்களை
இனப்படுகொலை செய்யும் சிங்களப் புத்தர்களுக்கு எதிராக இங்கு உருவாக வேண்டிய
மனநிலையை மழுங்கடிக்கவும் பயன்படும் என்பதை உணராத அல்லது உணர்ந்தும் சொந்த ஆதாயங்களுக்காக தங்களை
நம்பிய மக்களை விலைக்கு விற்கும் செயலாகும்.[6]
அதுபோலவே மார்க்சியம் என்ற ஒப்பற்ற கோட்பாட்டை வல்லரசுகளின்
நலன்களுக்கு
ஏற்றவாறு திரித்து ஏழைநாடுகளின்
பொருளியல் வளர்ச்சியை முடமாக்கி வல்லரசுகளுக்கு என்றும் மீளா அடிமைகளாக்கி உலகமே
கண்டு நடுங்கும் ஓர் அசுரனாக அமெரிக்கா வளர்ந்ததற்கு எதிர்ப்போ போட்டியோ
உருவாகிவிடாமல் அரணிட்டுக் காத்தவர்கள் ஏழை நாடுகளிலுள்ள ‘மார்க்சியர்கள்’.
வெளியிலிருந்த எந்த ஒரு சமயமோ கோட்பாடோ ஒரு நாட்டினுள்
நுழையும் போது எங்கிருந்து அது வருகிறதோ அந் நாட்டின் வலிமை, அந் நாட்டில்
அதற்குள்ள செல்வாக்கு, தன்னாட்டின் நிலை, அதனைப் பரப்ப வருகிறவர் யார்,
பரப்பலுக்காக உதவுவோர் யார், அவர்களுடைய நோக்கத்தில் அரசியல் உண்டா, அந்த
அரசியலால் நம் நாட்டின் ஒட்டுமொத்த நலன்கள் பாதிக்கப்படுமா, நம் நாட்டின் எந்தச் சிக்கலைக்
கையிலெடுத்துக்கொண்டு அது நுழைகிறது, அச் சிக்கலை அச் சமயம் அல்லது கோட்பாட்டின்
துணையின்றி நம்மாலேயே தீர்த்துக் கொள்ள முடியாதா என்பவற்றைச் சீர்தூக்கிப்
பார்த்து அப் புதியதின் நுழைவைக் கையாளத்தக்க வழிமுறைகளை மக்கள் முன் எடுத்து
வைக்க வேண்டியது அந் நாட்டு அறிவோர் மற்றும் ஆட்சியாளர் கடன். தன் நாட்டின் எந்த
ஒரு சிக்கல் அயலிலிருந்து சமயம் அல்லது கோட்பாட்டின் நுழைவைத் தேவையாக்குகிறது
என்பதைக் கண்டுபிடித்து அதனை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டியதும் இவ் விருசாரரின்
கடமை. இவ் விரு சாரரும் இக் கடமையில் தவறியே வந்துள்ளனர் என்பதற்கு நம் நாட்டினுள் நுழைந்து மக்களை
எண்ணற்ற குழுக்களாகச் சிதைத்து வைத்திருக்கும் அயல் மதங்களும் பாட்டாளியமாகத்
திரிக்கப்பட்ட மார்க்சியமும் பொருளியல் கோட்பாடுகளும் அனைத்து நாட்டு அமைப்புகள் மூலமாக நுழையும் வளர்ச்சி
மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் சான்றுகளாக
நின்று நம்மை அச்சுறுத்துகின்றன.
நம் அறிவாளிகளின் இந்தத் தவற்றினால் அன்று தமிழகத்தில்
நிகழ்ந்திருக்க வேண்டிய குமுகியல் -
பொருளியல் புரட்சி கைநழுவிப் போனதுடன் அன்றிலிருந்து நம் நாடு அயலவரின் பொருளியல்
சுரண்டலுக்கு ஆளாகியது மட்டுமின்றி உள்நாட்டுப் பொருளியல் விசைகளின் அழிவுக்கும் காரணமானது. ‘குதிரை கீழே தள்ளியதுமன்றி குழியும் தோண்டியது’ போல் தங்களது தவறுகளின் தீய விளைவுகளால் வாழ்விழந்து நின்ற
வாணிகர்களையும் தொழில்வல்லோரையும் ஒடுக்கும் பணியில் இறங்கினர் அன்றைய
ஆட்சியாளர்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் வாணிகர்களை, குறிப்பாகக் கடல்
வாணிகர்களைப் பற்றிய குறிப்புகளைக் கழகத் தொகுப்புகளில் மறைத்தது. கழக இலக்கியத்
தொகுப்பில் பிரிவு பற்றிக் கூறும் அகத்துறைப் பாடல்களில் கடல் வழிப் பிரிவு பற்றி
ஒரேயொரு பாடல்தான் உள்ளதாக வ.சுப. மாணிக்கனார் தனது தமிழர் காதல் நூலில்
குறிப்பிட்டுள்ளார். பண்டைத் தமிழர்களின் கடலாட்சி பற்றிய ஏதோ ஒன்றிரண்டு
செய்திகளைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்தாம் தருகின்றன. இந்தியாவெங்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடல் மேல்
செல்லும் ‘மேற்சாதியினரை’ச் சாதி
நீக்கம் செய்யும் வழக்கம் இருந்தது என்பதற்கு இராசாராம் மோகன்ராய் வரலாறே சான்று.
மோகன்தாசு கரம்சந்து காந்தியும் கணிதமேதை இராமனுசமும் அத் தடையை மீறிச்
சென்றவர்கள். அதுவும் வெள்ளையரின் ஆதிக்கத்தினால்தான் இயன்றது. நாம் என்றுமே
மாற்றங்களை நாமாக மேற்கொள்வதில்லை. யாராவது வல்லந்தமாகத் திணித்தால் கேள்வியின்றி
ஏற்றுக்கொள்கிற மழுங்கட்டைகள், சொரணையற்ற கூட்டம்; கொஞ்சம் பணம் கிடைத்தால் யார்
எவர் என்று பார்க்காமல் என்ன செய்கிறோம் என்று பாராமல், அதனால் யாருக்கு என்ன கேடு
வந்தாலும் தயக்கமின்றிக் களத்திலிறங்கி அடிமை செய்யப் புறப்பட்டுவிடும் ‘அறிவுசீவி’களால் வழிகாட்டப்படுபவர்கள்.
அன்று தொட்டு இந்தியா முழுவதும் கடல்தொழில் செய்வோர்
ஒடுக்கப்பட்டனர்; கடற்கரை புறக்கனிக்கப்பட்டது; அது மாறி மாறி வெளி விசைகளின் ஆளுகையில் இருந்தது. இன்றும்
அந் நிலை தொடர்கிறது. ஓங்கலை தாக்கிய கையோடு கடலின் அடித்தளத்திலிருந்து கரைக்கு
அடித்துவரப்பட்ட சேற்றில் என்னென்ன தனிமங்கள் வந்திருக்கின்றன என்ற ஆய்வைப்
பன்னாட்டு நிறுவனங்கள் கமுக்கமாக முடித்துக் கொண்டன என்ற குற்றச்சாட்டு ஒருபுறம்
எழ இன்னொரு புறம் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு எதிராக மீன்பிடித்
தொழிலாளர்களை தொழிற்சங்கமாக அணிசேர்க்கும் பணியை இங்கு இயங்கும் அமெரிக்கா சார்பான
‘கூட்டமைப்பு’ சிறப்பாகச் செய்து முடித்துவிட்டது. ஆக இன்று இந்தியாவிலுள்ள ‘முறை சார்ந்த’ அல்லது ‘முறைசாராத’ தொழிலாளர்கள் அனைவரும் அமெரிக்கா,
உருசியா அல்லது சீனம் சார்புடையவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். நாம் என்று நம்
நாட்டு மக்களின் சிக்கல்களுக்கு நாமே தீர்வு காணவேண்டும் என்பதை உணரப்போகிறோமோ
தெரியவில்லை.
இது போன்ற ஒர்
அரசியல் பின்னணியில் தொகுக்கப்பட்ட கழக இலக்கியங்களில் கடல் சார்ந்த, கடற்கோள் குறித்த, குமரிக் கண்டம் பற்றிய செய்திகள் அல்லது
குமரிக் கண்டம் என்ற பெயரைத் தேடுவது தவறு என்பதை உணர வேண்டும்.
அடுத்து புவியியங்கியல் புலி பஃறுளியாற்றை
ஒரு பிடி பிடித்து ஒரு கடி கடித்துள்ளார். குமரி மாவட்டத்தாருக்கு ஓர் ஆவல், குமரிக்
கண்டத்தை குமரி மாவட்டத்துள் அடக்கிவிட வேண்டுமென்று. இது, இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கோடாகிய
திருவிதாங்கூர் சமத்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் அப்பகுதியும் வேறு சில
பகுதிகளும் “தாய்”(மாற்றாந்தாய் என்று படிக்க)த் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்ற தவிப்பு
இருந்த காலத்தின் தொடர் விளைவாகும். ஆனால் அப்போதும் கூட இந்த நிலப்பரப்புக்கு ஒரு
மாவட்டப் பெயர் வைப்பது பற்றி அப் போராளிகளில் எவரும் எண்ணவில்லை, மத்திய வாலிபர் சங்கம், நாஞ்சில்
தமிழர் பேரவை, அகில திருவிதாங்கூர் தமிழர் பேராயம் திருவிதாங்கூர் தமிழ்நாடு பேராயம் என்ற பெயர்களைத்தான்
ஒன்றன் பின் ஒன்றாக வைத்தனர். தி.க., தி.மு.க.வினர்தாம் அந்த வட்டாரக் கிளைக்கு நாஞ்சில்
என்ற அடைமொழியை வழங்கினர். 1956 அக்டோபர் 31ஆம் நாள் இரவு வரை புதிய மாவட்டத்தின் பெயர்
நாஞ்சில் மாவட்டம் என்று இருக்குமென்றே பலர் எதிர்பார்த்தனர். அடுத்த நாள் விடிந்த
பின்தான் குமரி மாவட்டம் என்ற பெயரை முதன்முதலாக அறிந்தார்கள்.
குமரி
அம்மன் கோயிலைக் கூட அன்றைய குமரி மாவட்ட மக்கள் அவ்வளவாக நாடுவதில்லை. மேற்கிலிருந்து
மலையாளிகள்தாம், குறிப்பாக வெள்ளுவா(பௌர்ணமி) அன்று மொய்ப்பார்கள். அதனால்தான் அந்தப்
பெயர் மக்கள் கவனத்துக்கு வரவில்லை. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவராகிய காமராசர்தான்
அப்பெயரை முன்வைத்ததாகக் கூறினர். இப்போது குமரி மாவட்டம் என்ற பெயர் நிலைத்ததும் ஆய்வாளர்
அனைவரும் குமரி மாவட்டத்தினுள் குமரிக் கண்டத்தைக் கண்டுகொண்டனர். குமரியின் தமிழ்
மரபுகள் என்று ஒரு நூலை புலவர் வே.செல்லம் அவர்களும் பண்டிதர் எசு.பத்மநாபன்
அவர்கள் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதிவிட்டனர். ஆனால் இதற்காக அவர்களை ஒரேயடியாகக்
குற்றம் சொல்ல முடியாது. கோட்டாறு என்று பழைய பெயர் கொண்ட பழையாற்றை
பறளியாறு என்று குறிப்பிடும் ஒரு கல்வெட்டை வித்துவான் செ. சதாசிவம்
பிள்ளை சேரநாடும் செந்தமிழும் என்ற தன் நூலில் சுட்டுகிறார். பெருஞ்சாணி அணையைத்
தன் குறுக்கே கொண்டுள்ள பறளியாற்றிலிருந்து பாண்டியன் அணை எனும் ஓர் அணைக்கட்டின் மேலிருந்து
தோண்டப்பட்ட வாய்க்கால் வழியாக கோட்டாற்றுக்கு நீர் வருவதை வைத்து அந்த வாய்க்காலைப்
பறளியாறு என்றும் அதன் கோட்டாறு அதன் தொடர்ச்சி என்றும் தவறாக எண்ணி இந்தக் கல்வெட்டு
பொறிக்கப்பட்டுள்ளது. இதைக் கள ஆய்வு மூலம் கண்டறிந்த நண்பர் ம.எட்வின் பிரகாசு அவர்கள்
எழுதிய கோட்டாறு பஃறுளியாறான கதை என்ற கட்டுரை புதிய பார்வை
இதழில் வெளிவந்துள்ளது. அதை பின்னிணைப்பு - 2 ஆகச் சேர்த்திருக்கிறோம்.
பறளியாறு என்ற பெயரில் சேலம் மாவட்டத்திலும் கேரளத்திலும் ஆறுகள் இருப்பதால் இவை அனைத்தும்
கடல்கொண்ட நிலத்திலிருந்து கரையேறி பல்வேறிடங்களுக்குப் பெயர்ந்த மக்கள் தாங்கள் புதிதாகக் குடியேறிய இடங்களில் ஓடிய ஆறுகளுக்கு
முழுகிய தங்கள் நிலத்தில் ஓடிய ஆறுகளின் பெயர்களைச் சூட்டியதான ஒரு நிகழ்வேயன்றி வேறில்லை.
ஆக
புவியியங்கியல் புலி அடுத்தவர் எழுதிய நூல்களிலிருந்து கருத்துகளைப் பெயர்த்துத் தொகுத்துத்
தந்திருக்கிறாரே ஒழிய புவியியங்கியல் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்து ஒரு சொல் கூட
பக்கம் 31 வரை கூறவில்லை, “இப்பகுதியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொண்டால் இதுபற்றி மேலும்
அறியலாம்” என்று கூறியிருப்பதைத் தவிர. இதைச் சொல்ல இவர் வேண்டுமா என்ன?
[1] திருவாளர்கள் சு.கி. செயகரன் ′′முனைவர் ′′ கண்மணி போன்றோரை
வழிகாட்டிகளாகக் கொள்ளாமல் ஓரு சொல்லுக்கு அது கையாளப்பட்டிருக்கும் இடத்துக்கேற்ப
அதற்கு அகராதியில் தரப்பட்டுள்ள பல பொருள்களில் பொருத்தமானதை எப்படி முடிவு
செய்வது என்பதற்காக இவ்வளவு விரிவாகத் தந்துள்ளோம்.
[2] கோவிலடியில் 1924 ஆம் ஆண்டு வெள்ளத்தில் ஏற்பட்ட உடைப்பை
அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோருக்குக் கூலி வழங்கத்தான் உடனடியாக ஓர் உரூபாய்த்
தாள்களை இந்திய அரசே அச்சிட்டு வழங்கியதாம். இந்தத் தாள்பணம் தவிர வேறெந்த
நாணயத்தையும் இந்திய அரசு வெளியிடவில்லை. இந்திய ஏம(ரிசர்வு) வங்கிதான் அப் பணியைச்
செய்யும். 1924 உடைப்புக்குப் பின்னர் இது போன்ற வெள்ளங்களைத் தவிர்ப்பதற்கான
வழிவகைகளைக் கூறப் பணிக்கப்பட்ட சி.பி. இராமசாமி ஐயரின் கருத்தின்படிதான் மேட்டூர்
அணையும் கல்லணைக் கால்வாயும் அமைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
[3] திரு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரை: அடைக்கலக்
காதை, பொழிப்புரை: குமரியம் பெருந்துறை கொள்கையில் படிந்து – குமரியின் பெரிய
துறைக்கண் முறைப்படி நீராடி, விளக்கவுரை: குமரி – யாறு,
கடலுமாம்; “தொடியோள் பௌவம்”
என்றாராதலின்(சிலம். க - 1), பார்க்க, சிலப்பதிகாரம் மூலமும் நாவலர்
வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும், திருநெல்வேலித் தென்னிந்திய
நூற்பதிப்புக் கழக வெளியீடு எண் 1805,பக். 353 – 54.
[4] பார்க்க TAMILS EIGHTEEN HUNDRED YEARS AGO, V.Kanakasabhai, கனகசபை,வி., திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் , 1966,
பக். 8 - 9
[5] இலங்கையிலிருந்து
தமிழகத்துக்கு, அதுவும் சோழநாட்டுக்கு உணவா என்று மலைப்போர் ‘ஈழத்துணவும் காழகத்தாக்கமும்’ என்ற
பட்டினப்பாலை வரியை நினைவு கூர்க.
[6] இத் “தலைவர்”கள் பின்னர்
இம் முடிவை மாற்றிக்கொண்டனர்.
0 மறுமொழிகள்:
Post a Comment