4.தமிழால் வாழ்வோர்.
நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வாளர்களின்
பின்னணியையும் நாம் நோக்க வேண்டும். படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத்
திறனாய்வுக்கு உட்படுத்துவது சரியான ஆய்வு நெறியல்ல என்ற ஒரு பொதுவான கருத்து
உள்ளது. ஆனால் ஆய்வாளர் என்ற வகையிலும் துறை குறித்த அவரது பணி மற்றும் பாணி என்ற
வகையிலும் ஒருவரது இயல்புகளை எடை போடுவதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன்.
க.ப.அறவாணன், நான் முன்பு குறிப்பிட்டது
போல, தமிழில் பட்டங்கள் பெற்று அவற்றுக்கு வேலைவாய்ப்புகள் இன்மையால் மதிப்பில்லாத
ஒரு சூழலில் பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தில் இணைந்திருந்தவர். பின்னர் ம.கோ.இராமச்சந்திரன்
ஏற்படுத்தித் தந்த வாய்ப்பில் கல்லூரியில் விரிவுரையாளராகி துணைவியாருடன் ஆப்பிரிக்காவிலுள்ள
செனகலுக்குச் சென்று பணியாற்றிவிட்டுத் திரும்பியவர். அந்த நேரத்தில்
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் “தமிழர்களின் பிறந்தகம்” என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு பேசவந்தவர் செனகலில் தான் பணியாற்றியதைப்
பற்றியும் அங்குள்ள மக்களுக்கும் தமிழர்களுக்கும் சில பழக்க வழக்கங்களில் உள்ள சில ஒற்றுமைகளை(இருவரும்
சமையலில் புளியைச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான் அவற்றில்
குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது)
சொல்லிவிட்டு தான் எடுத்துக்கொண்ட பொருள்
பற்றி எதுவுமே பேசாது உரையை முடித்துக் கொண்டார். ஆனால் கையில் ஒரு குறிப்புச் சீட்டுக்
கற்றையை வைத்துக்கொண்டு மேலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துச் சொருகியவாறே பேசிய ஒயில்
இருக்குறதே அதை விளக்குவதற்கு எனக்குத் திறன் போதாது. இவரைப் போல் ஒயில் காட்டிய
ஒரு பாடகியின் நிகழ்ச்சியை எடுத்துரைத்த பெர்னாட்சா போன்றவர்களால்தான் முடியும்.
அதன் பின் ஒரு முறை
மதுரை இறையியல் கல்லூரியில் கி.பி. 8 - ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ள
சொல்வழக்குகள் தொல்காப்பியத்தில் இருப்பதால் தொல்காப்பியம் அதற்குப்
பின்னர்தான் தோன்றியிருக்க வேண்டும் என்ற அறிமுகக் குறிப்போடு ஒரு “கருத்தரங்கு” நடத்தினர். அதில் பெரீய்ய்ய்ய்ய்ய
தமிழ் அறிஞர்களெல்லாம் கலந்துகொண்டனர். இந்தக் குறிப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை;
ஏனென்றால் அங்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் “மார்க்சியர்கள்”. அவர்கள் பங்குகொண்ட ஓர் அரங்கில் தொல்காப்பியம்
கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியது என்று முடிவு செய்தால்
அவர்களுக்குப் பெருமைதானே!
ஆனால் க.ப.அறவாணன் இதையெல்லாம்
தாண்டியவர். அம்மணர்கள்(மார்வாரிகள் என்று படிக்க) வந்த பின்தான் தமிழர்கள் நாகரிகமே
கற்றனர் என்று எல்லார் மண்டையிலும் ஆணியடித்துவிட்டுத்தான் ஓய்வதாக முடிவெடுத்தவர்.
இது நமக்கு அப்போதெல்லாம் தெரியாது. “தமிழ்ச் சமூக வரலாறு” குறித்த அவரது ′படைப்பு′ வெளிவந்த பிற்பாடுதானே தெரியும்.
இவரது தடத்திலேயே நடைபொடும் இன்னொரு “ஆய்வறிஞர்” ஐராவதம் மகாதேவன்(இருவரில் எவர் முதலில் ′நடையை′த் தொடங்கினார் என்பது
தெரியவில்லை). அவரும் தொல்காப்பியம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப்
பின்னர்தான் தோன்றியிருக்கக் கூடும் என்று கருதுகிறார்; ஏனென்றால் அவர் ஆய்வுக்கு
எடுத்துக் கொண்ட எட்டாம் நூற்றாண்டு வரையுள்ள கல்வெட்டுகளில் ஒற்றெழுத்துகளில்
புள்ளி இல்லையாம்.
இவர் போன்றோரின் ′ஆய்வுநெறி′யை ஒரு
கற்பனை எடுத்துக்காட்டு மூலமாக பாவலர் விசுவதிலகம் ஒரு முறை விளக்கினார். ஒரு
தவளையின் நானகு கால்களையும் துண்டித்துவிட்டு அதனைத் துள்ளச் சொன்னார்களாம். அது
துள்ளவில்லையாம். ஆய்வு முடிவு – தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் அதற்குக் காது கேட்காது!
ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த, தமிழ்க்
கல்வெட்டுகள் பற்றிய இந்த ஆய்வு நூலுக்கு எட்டிய திசைகளிருந்தெல்லாம் பாராட்டு
மழை. ஆனானப்பட்ட தென்மொழியில் கூட ஒரு பாராட்டுக் கட்டுரை. பண்டைத்
தமிழகத்தில் ஆண் - பெண் வேறுபாடின்றி எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற ஐராவதத்தின் ′சான்றிதழி′ல்
அனைவரும் குளிர்ந்துபோனார்கள். கடைசியில் மூட்டையுள்ளிருந்த பூனையை அவிழ்த்து
வெளியேவிட்டவர் அசோகமித்திரன், தினமணி கட்டுரையொன்றில். தொல்காப்பியம்
எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதை நிறுவ மகாதேவன்
மேற்கொண்டுள்ள ′அறிவியல் அணுகலு′க்காக அவரை மிகவும் பாராட்டியிருந்தார் அவர்.
திரு.ஐராவதம் அவர்களுக்கும்
அசோகமித்திரன் அவர்களுக்கும் ′அறிவியல் அணுகல்′ என்ற பெயருடன் எதையாவது யாராவது கூறிவிட்டாலே
திகைத்துத் தடுமாறிப் போகும் ′தமிழறிஞர்களு′க்கும் சிலருக்காவது தெரிந்திருக்கத்
தக்க ஓர் உண்மையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆவணப் பதிவுக்காக கையால் ஆவணம்
எழுதும் பழைய தலைமுறை ஆவண எழுத்தர்கள் இன்று வரை புள்ளியின்றித்தான்
எழுதுகிறார்கள். ஐராவதத்தின் ′அறிவியல் அணுகலி′ன் படி தொல்காப்பியத்தைத்
தொல்காப்பியர் இனிமேல்தான் எழுத வேண்டும்.
நம்மிடையில் அணுக் கோட்பாடு இருந்தும்
தமிழ் மருத்துவர்கள் இன்னும் ஐம்பூதக் கோட்பாட்டையே கட்டியழுகிறார்கள்;
நாட்காட்டியில் ஆண்டு - மாதம் - நாள் முறையை ஐந்திறங்களின் (பஞ்சாங்கங்களின்) மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
அறிந்திருந்தும் வெள்ளையர் வந்து அதைத் திணிக்கும் வரை நாம் மாதம் – வளர்பிறை – தேய்பிறை - பக்கம்(திதி) - நாள்மீன்(நட்சத்திரம்) என்று மட்டும்தானே நாள்
குறித்துக் கொண்டிருந்தோம்; அதுதான் இதிலும் நடந்திருக்கிறது. தொல்காப்பியர் எதை
வேண்டுமானாலும் எழுதி வைத்துவிட்டுப் போகலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த ஏதோவொரு
அதிகார அமைப்பின் நெருக்குதல் தேவைப்படுகிறது.
“பெரியார் எழுத்துமுறை”யை
எடுத்துக் கொள்வோமே, ம.கோ.இராமச்சந்திரனின் ஆணையின்றி அது நடைமுறைக்கு வந்திருக்குமா?
′பகுத்தறிவுப் பகலவனி′டம் பாடம் கேட்ட தமிழ் ஈனத் தலைவர் அந்தப்
பகலவன் வகுத்த எழுத்துமுறை நடைமுறைக்கு வருவதில் செய்த தடங்கல்கள் எளிதில்
மறக்கத்தக்கனவா?
. பெரியார் மீதோ தமிழ் மீதோ ஏற்பட்ட
மாறாத பற்றினால் ம.கோ.இரா. அந்த எழுத்துமுறையைப் புகுத்தவில்லை. தனக்கு அன்று
ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் உத்தியே அந் நடவடிக்கை.
புத்தர் தொடங்கி அண்ணாத்துரை வரை அவர்களின்
பின்னர்களின் அரசியலுக்குத் தேவைப்படவில்லை என்றால் அவர்களின் பெயர்கள் அப் பின்னர்களாலேயே
இருட்டடிக்கபட்டிருக்கும்.
1956ஆம் ஆண்டு மாத்திரி அளவுமுறை(Metric System) ஒரு சட்டத்தின் துணையோடு
இந்தியாவில் புகுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள், அதாவது 51 ஆண்டுகள்
ஆன பின்னும் இன்றும் தமிழக அரசும் அரசுசார் நிறுவனங்களும் வெளியிடும் ஆவணங்களிலும்
ஆணைகளிலும் கூட அடியிலான அளவுகள் குறிக்கப்படுவதைக் காணலாம். 1956ஆம் ஆண்டுச்
சட்டத்தில் மாத்திரி முறை தவிர பிற அளவுகளைப் பயன்படுத்துவது குற்றவியல் சட்ட
நடவடிக்கைகளுக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய இறையியல் கல்லூரி அரங்கில்
மேற்கொண்ட கலந்துரையில் க.ப.அறவாணனோ பிற
′அறிஞர்களோ′ பெரும் ஆர்வம் காட்டவில்லை. நான்தான் அந்த இடத்துக்கே பொருத்தமற்றவனாக
அவர்கள் முன்வைத்திருந்த குறிப்பை எதிர்த்து வாதாடினேன்.
மதுரை இறையியல் கல்லூரியில் தியாபிலசு
அப்பாவு என்னும் மதகுரு(பாதிரி) அப்போது வெளிவந்திருந்த பதினாறு
வயதினிலே என்ற திரைப்படத்தில் ஒரு கதைமாந்தனின் பெயராகப் பரவலாக அறியப்பட்ட பறட்டை
என்ற பெயருடன் தான் ஒரு பொதுமைக் கொள்கையாளர் போன்று காட்டிக்கொண்டு ஏசுநாதரும்
ஒரு பொதுமைக் கோட்பாட்டாளர்தான் என மதப் பரப்பலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர்
பொறுப்பில்தான் இந்த நிகழ்ச்சி நடந்தது.
என்னுடைய கணிப்பின்படி வழக்கமாக
நடைபெறுவது போல் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பணம் கொடுத்த நிறுவனத்தின்
விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சியை நடத்தி கலந்துகொண்ட ′அறிஞர்கள்′ ′எய்திய′ முடிவைப்
பதிவு செய்வது அவரது நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பணம் தருபவர்கள் விரும்புவது
போல் கருத்துரையாற்றி, அங்கு கிடைக்கும் பணத்தைப் பெறுவதற்கு செலவுச் சீட்டில்
ஒட்டிக் கையெழுத்திடுவதற்கென்றே பையில் வருவாய் வில்லைகளை(Revenue Stamps)ச்
சுமந்து திரியும் ஒரு பெரும் அறிஞர் திருக்கூட்டம் தமிழ்நாட்டில் இருப்பதை அப்போது
புரிந்துகொண்டேன்.
இங்கு க.ப.அறவாணனைப் பொறுத்தவரை
சிறப்புச் செய்தி என்னவென்றால் அந்த அரங்கத்தில் பிறர் எல்லோரையும் விட மிகப்
பழகியவராக நடந்துகொண்டதுடன் தனக்குத் தொடர்வண்டியில் முதல் வகுப்பில் அன்றே செல்ல
ஏற்பாடு செய்யுமாறு கேட்டதில் அவரிடம் வெளிப்பட்ட பெரும் அதிகார மிடுக்குதான்.
அப்போது அவர் துணைவேந்தராகவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
பாவாணரின் பின்னர்களில் பலர் பதவி
கிடைத்ததும் தமக்கும் பாவாணருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகக்
காட்டிக்கொள்வதில்லை. ஆனால் க.ப.அறவாணனின் அணுகல் தனித்தன்மையானது. ஒரே நேரத்தில்
பாவாணர் நேயர்கள், ஆட்சியாளரகள், புரவலர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினர்க்கும்
மகிழ்வூட்டி ஆதாயமும் பெயரும் புகழும் சேர்க்கும் கலையில் அவர் வித்தகர்.
அவரும் துணைவேந்தர்
பதவிக்கு ஆசைப்பட்டது இயல்பே. எனவே நாம் தொடக்கத்தில் கூறியது போல் சில
விலைகளைக் கொடுப்பது இயல்புதான். இந்தப் பின்னணியில் அவருடைய ஒர் ஆக்கம்
சு.சி.செயகரனுக்குப் பயன்பட்டதில் வியப்பில்லை.
உரையாசிரியர்கள் குறிப்பிடும் 700
காவதம் என்ற தொலைவை 7000 மைல்கள் என்றும் 770 கி.மீ. என்றும் சிலரது நூல்களைச்
சான்று காட்டிக் கூறுகிறார் செயகரன். திட்டவட்டமான தொலைவு அவருக்குத்
தெரியவில்லை. அபிதான சிந்தாமணியில் கணிதவகை என்ற சொல்லின்
கீழ் பூப்பிரமாணம் என்ற தலைப்பில் உள்ளதை இங்கு தருகிறோம்.
சாண் 2
கொண்டது - 1முழம் (1½அடி.)
முழம் 12
கொண்டது - 1 சிறுகோல் (18அடி.)
சிறுகோல்
4 கொண்டது - 1 கோல் (72அடி.)
கோல் 55
கொண்டது - 1
கூப்பிடு (3960அடி.)
கூப்பிடு
4 கொண்டது - 1 காதம் (15840 அ.)
= 15840/5280 = (ஒரு மைல்) = 3 மைல்கள்
அபிதானசிந்தாமணியில் ஒரு
கூப்பிடு என்பது 56 கோல் கொண்டது என்றுள்ளது. நிட்டலளவையில் நமது மரபுமுறையில் 11 அடிகள் ஒர் அடிப்படை அலகு என்பதால் அதனை 55
என்று நான் கொண்டுள்ளேன்.
இந்தக் கணிப்பைத் தொடர்ந்து
செல்வோம்.
ஒலியின் விரைவு நொடிக்கு அதாவது செகண்டுக்கு
1100 அடிகள். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் (மினிட்டுகள்) எனவே ஒலி ஒரு நாழிகையில்
செல்லும் தொலைவு 1100X24X60=1584000 அடிகள்=300 மைல்கள்.
இப்படிப் பார்த்தால், ஒரு காதம் என்பது ஒலி ஒரு நாழிகையில் செல்லும் தொலைவில்
நூற்றில் ஒரு பாகம் என்பது தெளிவாகிறது. “கூப்பிடு தெலைவு”, “காதம்” (காது→காதம்) போன்ற சொற்கள்
இத் தொலைவுகள் ஒலியுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டுகின்றன. சென்ற தலைமுறை
மக்கள் அண்மையைக் குறிப்பிட “கூப்பிடு தூரம்” என்ற சொற்றொடரைப்
பயன்படுத்தினர். இவை தவிர குமரி மாவட்டத்தில் “நாழிகை தூரம்” என்ற ஒரு சொல்லையும் கையாண்டனர்.
காதம் என்ற இந்த அளவு
நம் முன்னோர்களின் அறிவியல் அணுகல் மற்றும் வளர்ச்சி பற்றிய சிறப்பு மிக்க ஓர்
தடயமாகும்.[1]
ஒரு காதம் என்பது 10 மைல் என்றொரு
கருத்து உள்ளது. அதை வைத்துக் கொண்டு, 700 காவதம் என்பது 700X10X1.6=11200கி.மீ. என்று திரு. செயகரன் கூறுகிறார். ஆனால் நாம் மேலே
தந்துள்ள கணக்குப்படி அது 700X3X1.61=
3381 கி.மீ. தான். இந்தத் தொலைவு குமரி முனைக்கும் (புவித்) தென் முனைக்கும் இடையிலுள்ள தொலைவாக
அவர் குறிப்பிடடுள்ள 8500 கி.மீ.யில்
பாதி கூட இல்லை. எனவே உரையாசிரியர்கள் விளக்கத்தில் மிகை என்ற பேச்சுக்கே
இடமில்லை. அக்கக் கோடுகளுக்கிடையிலுள்ள தொலைவு ஏறக்குறைய 110.5 கி.மீ. வீதம்
குமரி முனையிலிருந்து (தோராயமாக அக்கம் 8° 4′) 3381/110.5 =30° 35′ 50”.
குமரிமுனைக்குத் தெற்கே 8° 4′ + 23° 27′=31° 31′ இல்
சுறவ(மகர)க்கோடு இருக்கிறது.
எனவே உரையாசிரியர் குறிப்பிடும்
முழுகிய நிலப்பரப்பு ஏறக்குறைய சுறவக் கோடு வரை இருந்துள்ளது. இங்கே பகுத்தறிவுக்கோ,
புவியியங்கியல், புவியியல் ஆகிய எவற்றுக்குமோ பொருந்தாத எதுவுமே இல்லை.
தமிழ்விடு தூது பற்றிக் குறிப்பிட்டு,
குமரிக் கண்டம் என்ற பெயர் நூலிலோ, அங்குப் புலவர் எழுதிய உரையிலோ இடம்பெறவில்லை
என்கிறார் திருவானர் சு.கி.செயகரன். ஆக இங்கும் பெயர் பற்றி நம் இந்த அதிகாரத் தொடக்கத்தில்
எழுப்பிய அதே கேள்விதான்.
செங்கோன் தரைச் செலவு நூலைப்
போலி நூல் என்று மறுப்பதற்கு, விசயவேலவன் என்பவர், அந் நூல் எழுதப்பட்டதாகக்
கூறும் தாப்புப் புலிப்பா என்ற பாவகை கழகத் தொகுப்பில் இல்லை
என்கிறாராம். அதைத் தூக்கி நம் முன் வீசுகிறார் திருவானர் சு.கி.செயகரன். கழக
இலக்கியத்தில் மிகுதியான பாக்களும் ஆசிரியப் பாக்களே. செய்திகளைத் தடங்கலின்றி,
பெரும் யாப்புக் கட்டுப்பாடுகள் இன்றி பாடத்தக்கது ஆசிரியப்பாவே. இன்று
புதுப்பாப் புனைவைத் தொடங்கி வைத்தவர் பாரதி என்றும் அதனை
வளர்த்தவர்கள் இன்னின்னாரென்றும் ஆரவாரிக்கின்றனர் சிலர். கழக இலக்கியத் தொகுப்பிலுள்ள பாக்களில்,
வெண்பா போன்ற இலக்கணக் கட்டுகளுள்ள பாக்கள் எடுத்துக்காட்டுக்கென்று சொல்லும்
அளவினவே. இன்றைய புதுப்பாவுக்கு முன்னோடியான ஆசிரியப்பாவிலேயே ஏறக்குறைய
அனைத்துக் கழகப் பாடல்களும் அமைந்துள்ளன. இருண்ட இடைக் காலத்தின் இறுதியில்
சிற்றரசர்கள், பாளையக்காரர்களின் காலடியில் கிடந்த வயிறு காய்ந்த புலவர்களின்
இயலாமைகளால் மங்கிக் கிடந்த அந்தப் பாவகையை இனங்கண்டு புதுப்பாவென்று பாரதி முன்வைத்தார்.
அவ்வளவுதான்.
தொகுப்புகளாகிய சங்க இலக்கியங்களே
பழந்தமிழ் இலக்கியங்களின் எல்லை என்று நம் பொதுமைத் தோழர்கள் கூறலாம். ஆனால்
பகுத்தறிவும் நடுநிலை நோக்கும் அற்ற, புலனறிந்ததை முழுமையாகப் பகுத்தாய வேண்டும்
என்றும் கருதாத அந்த “முற்போக்கர்களி”ன் வழியில் செங்கோன்
தரைச் செலவு நூல் போலி என்று ஒதுக்கிவிடுவதற்கில்லை. அத்துடன் வையாபுரியார்
இந் நூலை எதிர்த்துள்ளனர் என்று திருவானர் சு.கி. செயகரன் தரும் செய்தியே அந்த
நூலை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக நாம் கொள்ளலாம்.
நேர்மையான, விழிப்புணர்வும் செயலூக்கமும்
உள்ள ஆய்வாளர்களின் செயல் எப்படி இருந்திருக்கும்? இப்படி ஒரு பாவகை இருந்ததாகக்
கருதி அதிலுள்ள பாடல்களில் சிலவற்றை ஒருவர் தான் கண்டெடுத்ததாகப் பதிப்பித்துள்ளதை
வைத்து முன்னாளில் இவ்வாறு ஒரு பாவகை இருந்தது என்பதையும் அதன் இலக்கணம் யாதென்பதையும்
ஆய்ந்து வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த நூல் வெளிவந்த பிறகு வாழ்ந்துள்ளனரே
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்ல, “பழமும் தின்று கொட்டையும் போட்ட” அறிஞர்கள், இவர்களில் ஒருவர் கூட இத்திசையில் செயற்படாமல் இருந்திருக்கிறார்களே
என்பது நம் வருத்தம்.
வையாபுரியாரைப் பற்றிய நம் திறங்கூறல் எம் கருத்துகளோடு உடன்பாடு
கொண்டவர்களைக் கூட சிறிது நெளிய வைத்திருக்கும். அதனால் சில சூழ்நிலைகளை வெளியிடுவது
இன்றியமையாதது என்று கருதுகிறோம். “கீழ்ச்சாதியினரின்
மொழியான தமிழை” உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு எதிராக
மேலடுக்கிலிருந்த பார்ப்பனர்களின் “தாய்மொழி” என்று நம்பப்பட்ட சமற்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பதில்
மகிழ்ச்சியடைவோரில் தலைமை இடம் பிடிக்கத் தக்க அவர் நுண்ணறிவும் விரிந்த
படிப்பும் உள்ளவர். நேர்மைதான் அவரிடம் இல்லை. ஒரு கை நிறைய மண்ணை அள்ளி வைத்துக்
கொண்டு, “இதில் இத்தனை மண் பரல்கள் உள்ளன, வேண்டுமானால் நீ
எண்ணிப் பார்த்துக் கொள்” என்ற வகையில் அவரது அணுகல் இருந்தது.
இந்தச் சொல் இந்த நூற்றாண்டில்தான் வழக்குக்கு வந்தது என்று ஒங்கி ஓர் அடி
அடித்து விடுவார். இந்த அடாவடித்தனத்தைதான் நம் பொதுமைக் தோழர்களும் பிறரும் “அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முறை” என்று உச்சியில்
வைத்துக் கூத்தாடுவர்.
ஆனால் சூழ்நிலை அத்தகையதாகவே உள்ளது.
தமிழ்ப் புலவர்கள், பண்டிதர்கள் பேராசிரியர்கள் என்போர் இந்த நிலையில் எந்த
முன்னேற்றமும் ஏற்படாதவாறு கண்கொத்திப் பாம்பு போல் கருத்தாகக் கண்காணித்து
வருகிறார்கள். அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில
புறத்தென்மனார் புலவர் என்ற தொல்காப்பிய வரிகளுக்கு ′அடிமையர்க்கும்
கைவினையாளருக்கும் ஐந்திணை ஒழுக்கம்
பொருந்தாது, அதாவது அவர்கள் ஒழுக்கம் குன்றிவர்கள்′ என்ற விளக்கத்துடன் நான்
எழுதி தினமணி இதழில் வந்த என் மடலைப் படித்துவிட்டு, பேரா. வளனரசு
அவர்கள் சாலையில் செல்லும் போது மறித்து, இந்தப் பொருள்கூறலை நீங்கள் யாரிடம் “பாடம்” கேட்டீர்கள் என்று சிறிது ஆத்திரத்துடன் கேட்டார். இதற்கு “யாரிடம் கேட்க வேண்டும்? அதுதான் நூற்பாவே இருக்கிறதே” என்றேன். “உங்களுடன் பிறகு பேசுகிறேன்” என்று சொல்லிப் போய்விட்டார். ஆக முன்பு கூறப்பட்டவற்றுக்கு மாறாகப்
பொருள் கொள்வது இவர்கள் பார்வையில் பெருங்குற்றம்.
ஒரு மொழிக்கு அகராதி உருவாக்க
வேண்டுமாயின் அம் மொழியிலுள்ள அனைத்து வகை எழுத்தாக்கங்கள், கல் வெட்டுகள்,
ஓலைச் சுவடிகள், நாட்டார் வழக்காறுகள், மக்களின் அன்றாடச் சொல் வழக்குகள் என்று
எத்தனையோ வேண்டும். இவை அனைத்தையும் திரட்டி சொல்லடைவு, பொருளடைவு என்று அடைவு
செய்ய வேண்டும். இந்தப் பணியின் அடிப்படையில் அகராதி மட்டுமல்ல, கணினி வழியான
மொழியியல் பணிகளையும் மேற்கொள்ள முடியும். இது ஒரு பெரும் பணி. ஆட்சியாளர்கள்
உரிய பணம் ஒதுக்கினால் பல பத்தாண்டுகள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் ஆக்கப்
பணி. ஆனால் இதைச் செய்ய அரசும் ஆயத்தமாயில்லை, தமிழால் பிழைப்போருக்கும்
தோன்றவில்லை. இந்த இரண்டு வகைப்பாட்டிலும் சேராத ஒருவரின் செயற்பாட்டை அரசுப்
பொறியும் தமிழ்ப் பேராசிரியர்களும் எவ்வாறு முடக்கினார்கள், அழித்
தொழித்தார்கள் என்பதைப் பார்ப்போம்.
நெல்லையைச் சேர்ந்த
இ.மு.சுப்பிரமணிய(பிள்ளை)ர் என்பவர் 1934 இல் மாநில தமிழச் சங்கம்
என்றொரு அமைப்பை உருவாக்கினார். அவர் ஒரு தமிழ் மருத்துவரும் கணியருமாவார்.
திருக்கணித ஐந்திரம்(பங்சாங்கம்) ஒன்றைத் தூய தமிழில் பதிப்பித்தும் வந்தார்.
அவ்வப்போதைய ஆட்சியாளர்களுடன் தொடர்பு
ஏற்படுத்திக்கொண்டு அரசிடமிருந்து பொருளுதவி பெற்று மொழி மாநாடுகள் நடத்தி, ஆட்சிச்
சொல் அகராதி போன்றவற்றை வெளியிட்டார். 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களைப்
பற்றி, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் என்ற தலைப்பில் 20 மடலங்கள் எழுதத்
திட்டமிட்டு 10 மடலங்கள் வெளியிட்டிருந்தார். இந் நிலையில் தி.மு.க. ஆட்சியில்
அமர்ந்தது. அக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு இச் சங்கத்தைக் கைப்பற்ற வேண்டும்
என்ற அவா எழுந்தது. எனவே இ.மு.சு.அவர்கள் மீது சங்கத்தின் அரசுசார் தலைவரான
மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் முறையீடு செய்தனர். உசாவலில் எதுவும் நகரவில்லை. பின்னர்
இவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அந்த மூத்த தமிழறிஞரை அடித்து உதைத்து அவர்
திரட்டி வைத்திருந்த நூல்கள், எழுதி வைத்திருந்த படைப்புகள், கணியம், மருத்துவம்
சார்ந்த அவரது சொந்த நூல்கள், சங்க விழாக்களுக்கு வரும் விருந்தினருக்குச்
சமைக்கவும் அவர்கள் குளிக்க வெந்நீர் வைக்கவும் பயன்படுத்தவுமான பாத்திரம்
பண்டங்கள், நாற்காலி, மேசை முதலியவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். நூல்களை,
பாளையங்கோட்டைப் பேருந்து நிலையத்திலிருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான 1ஆம் எண்
கடையில் கொட்டிவைத்தனர். பாத்திரங்கள், பண்டங்கள், தளவாடங்களைக் புதிய செயலாளரான
தூ.அய்யாசாமி தன் வீட்டில் வைத்துக் கொண்டார்.
இதில் நேரடியான அரசியல் செல்வாக்கைச்
செலுத்தியவர்களில் தி.மு.க. பெருந்தலைகளான அறிவுடை நம்பி, இரத்தினவேல் பாண்டியன்,
முன்னாள் சட்டமன்றத் தலைவரான செல்லப்பாண்டியன்
ஆகியோர் முதன்மையானவர்கள். துணைநின்றோர் அல்லது வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர்கள் போராசிரியர்கள் ப.வளனரசு, தே.
லூர்து, பாண்டியன் தனசிங், இன்னாசி, புலவர் ஆபிரகாம் அருளப்பர், தமிழிலும் சிவனிய
மெய்யியலிலும் வல்லுநரான சி.சு.மணி போன்றோர். இவர்களின் செயலில் அரசியல் கட்சி
கழப்புண்ர்ச்சியுடன் சாதியுணர்வுகளும் கலந்திருந்தன.
இந்த நிகழ்ச்சியால் மனமுடைந்து போன
இ.மு.சு. அவர்கள் விரைவில் மறைந்து போனார். தமிழையும் தமிழ் சார்ந்த அனைத்தையும்
பழிப்பவரும் வெறுப்பவருமான புதிய செயலாளராகிய வழக்கறிஞர் தூ.அய்யாசாமி, சங்கத்தின்
தமிழ்ப் பணி எதிலும் ஈடுபடாமல் இ.மு.சு. விட்டுப் போயிருந்த பணத்தை வங்கியில்
போட்டு வட்டி சேர்த்து, தான் ஊழல் செய்யாமல் பணத்தைப் பெருக்கியிருப்பதாகப்
பெருமையடித்துக்கொண்டிருந்தார்.
வழக்கறிஞரான இ.மு.சு.வின் மகன், தன்
தந்தையின் பொறுப்பிருந்த சங்கத்தைக் பறித்துக்கொண்டவர்கள் எந்தப் பணியும்
செய்யாமல் அதனை முடக்கி வைத்திருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி ஓர் அறிவிக்கையை
விடுத்தார். இதை எதிர்கொள்வதற்காக அரக்கப் பரக்க சில தமிழ்ப் பேராசிரியரின்
துணையுடன் நற்றிணை, குறுந்தொகை போன்ற ஓரிரு நூற்களின் சாரத்தை 20 அல்லது
30 பக்கங்களில் எழுதி வெளியிட்டனர். திருவாசகம் மூலமும் உரையும் என்றொரு
நூலையும் வெளியிட்டனர். அடுத்த கட்ட நூல் வெளியீட்டுக்காகத் திட்டமிட்ட போது புலவர்
ஆறுமுகம் என்பவர் உரையுடன் விவேக சிந்தாமணியையும் பேரா. தே.லூர்து
அவர்களின் பரிந்துரையின் மேல் எனது படைப்பான தமிழகச் சமூக வரலாறு -
வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற நூலையும் பேரா.வே.மாணிக்கம்
அவர்களின் கட்டபொம்மன் கதைப்பாடல் என்ற நூலையும் வெளியிட்டனர்.
இந்தக் காலகட்டத்தில் சங்கத்தின்
மேற்கூறிய வரலாற்றை அறிந்த நான் செயலாளரின் இசைவுடன் போர.வே.மாணிக்கம் அவர்களுடன் இணைந்து
பாளையங்கோட்டை பேருந்து நிலைய நகராட்சிக் கடை எண் 1இல்
கிடந்த சங்கத்துக்குச் சொந்தமான நூல்களை, அவற்றின் இருப்புப் பதிவேட்டுடன்
ஒப்பிட்டு என்னென்ன நூல்கள் காணாமல் போயுள்ளன என்று கணக்கெடுத்தோம், ஏனென்றால்
இ.மு.சு. அவர்களின் மருத்துவம், கணியம் தொடர்பான நூல்களையும் சங்கத்துக்குச்
சொந்தமான நூல்கள் பலவற்றையும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திப்
பறித்தவர்களில் சிலர் தங்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்று செயலாளர்
கூறியிருந்தார்.
அவ்வாறு சரிபார்க்கும் போதுதான்
இ.மு.சு. ஆற்ற எண்ணி நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்த பணிகளின் அருமை தெரிந்தது.
அதாவது கழக இலக்கியம் ஒவ்வொன்றுக்கும் மூலம், உரை ஆகியவற்றுடன் சொல்லடைவு,
பொருளடைவுகளைப் பெரும் பதிவேடுகளில் எழுதி வைத்திருந்தார். இந்தப் பணிக்காகத் தன்
உறவிலிருந்து ஓர் இளைஞனை அமர்த்தியிருந்ததைத்தான் “நேர்மையின் காவலர்கள்” ஊழல் என்று சுட்டிக்காட்டி அவரைப் பலிவாங்கியுள்ளனர்.
அவருடைய மகன் அறிவிக்கை விடுத்ததும்
சடபுடவென்று கற்றறிந்த பேராசிரியர்களைக் கொண்டு மேலே கூறியவாறு சில கழக நூல்களை 20, 30 பக்கங்களுக்குள்
சுண்டக் காய்ச்சி வழங்கிவிட்டனர். சமய
நூலாகிய திருவாசகத்தை மூலம், உரையுடன் வெளியிட்டவர்கள் அவர் தன் அறிவியல் அணுகலில்
கடும் உழைப்பில் உருவாக்கிய சொல்லடைவு, பொருளடைவுகளைத் தூக்கிப் போட்டுவிட்டுச்
சக்கையை மட்டும் அச்சிட்டனர்.
சொல்லடைவு என்பது ஒரு சொல் ஒரு நூலில்
எந்தெநத
இடத்தில் எல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை அகரவரிசையில் வடிப்பது. பொருளடைவு
என்றால் ஒரு சொல்லுக்கு அதற்குரிய பல்வேறு பொருள்களில் அகர வரிசையில் ஒவ்வொரு
பொருளிலும் எந்தெந்த இடங்களில் கையாளப்பட்டுள்ளது என்று காட்டுவது. இது அகராதி
தொகுப்பதற்கு மட்டுமல்ல, கணினியில் மொழி பெயர்ப்பு உட்படப் பல நோக்கங்களுக்கும்
பயன்படுவது. இலக்கணம் வகுப்பாருக்கும் இந்த அடைவுகள் இன்றியமையாதவை. தொல்காப்பியம்,
நன்னூல் போன்ற நூல்களில் எண்ணற்ற சொற்கள் அலசப்பட்டு அவற்றின்
உறுப்புகளின் இயல்புகள் கூறப்பட்டுள்ளமைக்கு இந்த அடைவுகளே அடிப்படைக்
கருப்பொருட்களாம். தமிழைச் பிழைப்பாகக் கொண்ட பேராசிரியர்களுக்கு அவ்வாறு
கொள்ளாத இ.மு.சு.வின் பணியின் அடிப்படை விளங்காமல் போனதில் வியப்பில்லை.
சங்கத்தின் நூற்பட்டியலை ஒப்பிட்டுப்
பார்த்த சில நாட்களில் பி.ஆர்.சுப்பிரமணியன் என்னும் தமிழ்ப்
பல்கலைக் கழகப் பேராசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் பல்கலைக் கழக தமிழ்
அகராதித் துறையில் பணியாற்றுவதாகக் கூறினார். அவரிடம் இ.மு.சு.வின் அடைவுகள் பற்றி
நானும் பேரா. மாணிக்கமும் எடுத்துக் கூறினோம். அது அவரது பணிக்கு மிகவும் உதவியாக
இருக்கும் என்று விளக்கினோம். தான் திருவனந்தபுரம் போய்க் கொண்டிருப்பதாகவும்
பல்கலைக் கழகத்துக்குச் சென்ற பின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச்
சென்றவருக்கு நினைவூட்டலும் எழுதினேன். அவரிடமிருந்து எந்த வினையும் இல்லை.
பல்கலைக் கழகங்கள் அங்குள்ள பேராசிரியர்
வட்டத்துக்கு வெளியே எவருடைய பணிகளையும் ஏற்பதில்லை. கு.வெங்கடாசலம்
என்ற பணி நிறைவுற்ற நடுவனரசு நில அளவைத் துறைக் கள அலுவலர், தான் அசாம் போன்ற வட
கிழக்கு மாநிலங்களிலுள்ள எடை, நீளம் போன்ற மரபு அளவைகள் தமிழ்நாட்டு முந்திரி
வாய்ப்பாட்டுக்கு இணையாக இருப்பதைக் கண்டு, சிந்து சமவெளி எடைகள், அளவுகளை ஆய்ந்து
அவற்றிலுள்ள விகிதங்களும் அவ்வாறே இருக்கக் கண்டு தமிழ் நாட்டில் நிலவும் மரபுத் தொழில்நுட்பங்களிலும் கையாளப்படும் அளவைகள்,
குறீயீடுகளைக் களத்தில் ஆய்ந்து அதனடிப்படையில் தமிழ் நூலாகிய கணக்கதிகாரத்தில்
ஓர் ஆய்வு செய்வதற்கு உதவி வேண்டி அப்போதைய தமிழ்ப் பல்கலைகத் கழகத் துணைவேந்தர்
திரு.வ.அய்.சுப்பிரமணியத்தை அணுகியுள்ளார். அவரோ “எம்
பேராசிரியர்களே அப் பணியைச் செய்வர்” என்று நறுக்காக
மறுமொழி கூறி அவரை விரட்டிவிட்டார்.
பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரை, அவர்களின்
சம்பளப்பட்டியலிலுள்ள பேராசிரியர்கள் தவிர பிறரெவரின் ஆங்கங்களுக்கும் ஊக்கம்
தருவதில்லை. சம்பளப்பட்டியலுள் வருவோரின் ஆக்கங்கள் கூட ஆட்சியாளர்களின் கருத்து
வரையறைக்குள் வந்தால்தான் ஏற்பர். இந்த கட்டுப்பாடு, ஏற்கனவே ஆட்சியாளரின் கருத்தோட்டங்களுக்கு
இசையத் தம்மைத் தகவமைத்துக் கொண்ட பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் ஆக்கங்கள்தாம்
பல்கலைக் கழகத்தின் பணத்திலிருந்து வெளிவரும் என்ற தன்னுணர்வின்றியே செயற்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட
திரு.கு.வெங்கடாசலம் அவர்கள், பின்னர் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் “மேற்குத் தொடர்ச்சி
மலைப் பாதுகாப்புப் நிறுவனம்” என்ற பெயரில் செயற்பட்ட
திட்டத்தில் பணியாற்றினார். இவ்வாறு நம் நாட்டின் ஆட்சியமைப்பு நம்மவரின் அனைத்து
வளங்களும் அயலவர்க்கு மட்டும் பயன்படுமாறு மடை திருப்பி விடுவதாக உள்ளது.
இது போன்ற ஓர் ஆய்வு வெற்றிடத்தைப்
பயன்படுத்திக் கொண்டு வையாபுரியாரின் “அறிவியல் சார்ந்த ஆய்வு” அரங்கேறியது. பார்ப்பனர் - சிவனிய வெள்ளாளர் போட்டி உச்சியிலிருந்த சென்ற
நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவனிய வெள்ளாளர் தூக்கிப்பிடித்த தமிழ்ப் பண்பாட்டின்
முன்மை, முதன்மை பற்றிய கருத்தோட்டங்களை முறியடிப்பதற்கு அவர்களிடையிலிருந்து
கிடைத்த இந்த ஆயுதத்தைப் பார்ப்பனர்களும் அவர்களது சார்பாக வாதாடிய
பொதுமையினரும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
அது போலத்தான் புதுமைப்பித்தனும்.
அவரது தந்தை வே. சொக்கலிங்கம் பிள்ளை, குமரிக் கண்டத்தில்
முருகனுக்கும் அசுரனுக்கும் நடைபெற்ற போரில் தோற்ற அசுரர்கள் தெற்காசியக் கடற்கரை
வழியாக ஐரோப்பாவினுள் நுழைய, கடற்கோள்களின் போது அதே திசையில் சென்ற முருகன் வழி
வந்தவர்கள் அவர்களுடன் மோதிக்கொண்டு அரசுகளை அமைத்தார்கள் என்று ஐரோப்பிய
மக்களின் பழமரபு, நாட்டார் வழக்காறு, பெருவியப்புச் செய்திகள்(legends) ஆகியவற்றை
ஆய்ந்து The Eruopean Races and Peoples என்றொரு
நூலை எழுதி அதன் முதன் மடலத்தை 1934 இல் வேல்சு இளவரசர் இந்தியா
வந்த போது வெளியிட்டார். இரண்டாம் மடலத்தின் கையெழுத்துப் படியையும் அதை
அச்சிடுவதற்கான பணத்தையும் தங்கள் கல்லூரி ஆள்வினையாளர்களிடம் ஒப்படைத்துச் சென்றதாக முன்னாள் நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி
முதல்வர் ம. இராமசாமி அவர்கள், அவர்கள் துணை
முதல்வராக இருந்த போது கூறி முதல் மடலத்தை எனக்குப் படிக்கத் தந்தார். இரண்டாம்
மடலத்தின் கையெழுத்துப் படியும் இந்த ஆய்வுக்காக அவர் பயன்படுத்திய நூல்களும் அக் கல்லூரியின்
நூலகத்தில் பாதுகாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகிய
தன் துயர நிலையைக் கண்டுகொள்ளாமலிருந்த தந்தை மீது புதுமைப்பித்தன் ஆத்திரம்
கொண்டதும் அவரது ஆய்வுகளைப் பழித்ததும் இயல்பே. அந்த வகையில் அவர் கூறிய “தமிழ்ப் புலவர்களுக்கு
உலகின் முதல் குரங்கே தமிழ்க் குரங்குதான்” என்ற கூற்றைக்
குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு பார்ப்பனர்கள் புதுமைப்பித்தனைக் தாங்கிப்
பிடித்தனர். அதனாலேயே பொதுமைக் கட்சியினரும் தாங்கினர்.
புதுமைப்பித்தன் தன் சாதி ஏழைகள் மீது
தன் சாதி மேட்டுக்குடியினரே நிகழ்த்தும் சுரண்டலைக் கடுமையாகச் சாடியும் நம் சமயங்கள்,
தொன்மங்கள் ஆகியவற்றைக் கடிந்து பகடி செய்தும் எழுதிய உண்மையான ஒரு முற்போக்கர்
ஆவார். ஆனால் நம் பொதுமையர் அவரைப் போற்றுவது அவரது முற்போக்கு கருத்துகளுக்காக
அல்ல. தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு மீது அவர் கூறிய ஓர் எதிர்மறைக்
கூற்றுக்காகத்தான். உண்மையான பொதுமைக் கோட்பாட்டினரை அவர்கள்
போற்றுவதில்லை. பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் என்ற உயர்தரமுள்ள பாவலரை, திரை நடிகர் ம.கோ.இரா.வின்
தேர்வு இல்லையாயின் உலகு அறிந்திருக்காது. அங்கும் இங்கும் ஊசலாடிய பாரதியாரை
உச்சி மேல் வைத்துப் போற்றும் நம் பொதுமைக் கட்சியினர் பொதுமைத் கருத்துகளைத்
தன் பாடல்களில் அழுத்தமாகப் பதிந்த பாவலர் கலியாணசுந்தரத்தை காலங்கடந்துதான்
ஒப்புக்குப் பாராட்டினர்.
ஆனால் சிவனிய வெள்ளாளர் தந்தைக்கும்
பார்ப்பனத் தாய்க்கும் பிறந்த செயகாந்தன், இது போன்ற சாதி மறுப்புத்
திருமணத்தில் பிறக்கும் பிள்ளைகளின் பொது இயல்பான, பெற்றோர் இருவரில் மேல்
சாதியினரோடு தன்னை இணைத்துக்கொண்டு அவர்களின் நலன் மீது அளவு மீறிய முனைப்புக்
காட்டினார். பார்ப்பனத் தெருவின் நடுவில் நின்றுகொண்டு இரு பக்கமும் உள்ள வீடுகள்
எதையும் நோக்காமல் தெருவை நேராக நோக்கி நின்று கையில் கலத்துடன் வேதங்களைக்
கூறிச் செல்ல இரு பக்கத்து வீடுகளிலிருந்தும் மக்கள் போடும் அரிசி போன்ற
பொருட்களைக் கொண்டு உயிர் வளர்க்கும் ஒர் “உஞ்சவிருத்தி”ப்
பார்ப்பனரின் முதிய மனைவி, கணவனின் காலத்துக்குப் பின் உதவட்டுமே என்று பரிசுச் சீட்டு
வாங்கியதற்காக கணவன் இறந்த பின்னரும் தான் உயிர் வாழ வேண்டுமென்று நினைத்துப் “பதிவிரதா தர்மத்தை”ச் சீர்குலைத்துப் பார்ப்பனப்
பண்பாட்டுக்கே இழுக்கு தேடித் தந்துவிட்டாள் என்று சிறுகதை எழுதிய செயகாந்தனைத்
தலை மேல் வைத்துக் கூத்தாடுவது அவரது “முற்போக்கு” சிந்தனைக்காகவா அல்லது பார்ப்பனிய மனப்போக்குக்காகவா?
“பகுத்தறிவாளர்”களும் வெள்ளிக்
கிழமை என்ற தலைப்பில் முரசொலியில் எழுதிய தொடர்கதையில் வெள்ளிக்
கிழமை செல்லும் நோக்கம் ஈடேறாது என்ற தாயின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டுப்
பெண்பார்க்கச் சென்ற இளைஞனும் நண்பனும் சென்றவிடத்து நிகழ்ச்சிகளால் பார்க்க வந்த
பெண்ணும் நண்பன் கண்டு காதலித்த பெண்ணும் மாண்டுபோக நண்பர்கள் துயரைச் சுமந்து
திரும்பியதாகத் தாயின் மூட நம்பிக்கைக்கு உயிர் கொடுத்த கருணாநிதியைப்
“பகுத்தறிவுப் பகலவன்”
பெரியாரிலிருந்து தெறிந்த குட்டிப் பகலவன் என்று இன்னும் கொட்டி முழக்குவது
போன்றதுதான் பொதுமைக் கட்சியினரின் “கொள்கை”ப் போக்கு.
இந்தக் கோணத்திலிருந்து
பார்த்தால்தான் க.ப.அறவாணன், செயகாந்தன் போன்றோர் கருணாநிதி வழங்கும் விருதுகளைப்
பெற முடிவதன் மறையத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
[1] இயற்கை அல்லது இறைவன் ஒலிவடிவானவன் என்பது தமிழர்களின்
அடிப்படை நீட்டலளவு ஒலியுடன் தொடர்புடையது என்ற உண்மையிலிருந்து உருவான ஒரு சமயத்
திரிபுக் கருத்தோ?
0 மறுமொழிகள்:
Post a Comment